தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் நடிகர் வெற்றி மாறன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைதும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துக்கொண்ட வெற்றிமாறன் திரைத்துறை சார்ந்த  தனது நிலைப்பாட்டை எடுத்து வைத்தார். எழுத்தாளர் ம.தொல்காப்பியன் எழுதிய ‘ சினிமா ஒரு காட்சி இலக்கியம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் “ 25 வருடங்களாக சினிமா விமர்சனங்களை உற்றுநோக்கி வருகிறேன்.  நல்ல விமர்சகர்களே இல்லை. விமர்சனங்கள் சரியாக இருந்தால்தான் நல்ல திரைப்படங்கள் வெளியாகும். விமர்சனம் என்ற பெயரில் சொந்த விருப்பு வெறுப்புகளை அரசியல் சாயலில் திணிக்கின்றனர்” என தெரிவித்தார் மேலும் சினிமாவை ஒரு கலையாக பார்க்கும் புத்தக படைப்புகள் வெகு குறைவாகவே உள்ளது என வேதனை தெரிவித்தார். இந்த விழாவில் இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





தமிழ் சினிமா எப்போதும் மாற்று சிந்தனையாளர்களை கொண்டாடியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு அந்த படங்களின் இயக்குநர்களும் கொண்டாடப்படுகிறார்கள். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் தொடங்கி , பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணிரத்தினம் என அவரவர் தனக்கென தனி பாணியை பின்பற்றி வருகின்றனர். அவர்களின் மாறுபட்ட அணுகலை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.கடந்த 2007-ஆம் ஆண்டு தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற ஹிட்  திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் வெற்றி மாறன். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தால் அடுத்தடுத்த பெரிய ஹீரோக்களின் கால்ஷீட்டில் வழக்கமான அதிரடி காட்சிகளை படமாக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் , நிறுத்தி நிதானமாக பயணிக்கும் இயக்குநராய் வேறுபடுகிறார் வெற்றிமாறன்.




பொதுவாக ஒரு இலக்கிய தழுவலை மக்களிடம் கொண்டுசெல்வது  அவ்வளவு எளிதான காரியமல்ல. இயக்குநர் மகேந்திரனுக்கு பிறகு அதனை லாவகமாக கையாளுகிறார் வெற்றி மாறன். திரைத்துரையில் கால் பதித்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை ஐந்துதான். ஆனால் அத்தனையும் செம ஹிட். அதுமட்டுமல்லாமல் பல விருதுகளையும் வாங்கி குவித்தன. எடுத்த ஐந்து படங்களில் நான்கு படங்கள் தனுஷ் கூட்டணிதான். பொல்லாதவனுக்கு பிறகு ஆடுகளம் அதன் பிறகு வடசென்னை, அசுரன் என நான்கு படங்களில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே செம ஹைப்தான்.வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது