இயக்குநர் ராசு மதுரவன்


எத்தனை முறை பார்த்தாலும் சில படங்கள் குடும்ப ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துவிடுகின்றன. அப்படியான பட்டியலில்  ராசு மதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய இரு படங்களும் எப்போது இடம்பெறும்.


புற்று நோயால் ராசு மதுரவன் இறந்து கடந்த ஜூலை 9-ஆம் தேதியோடு 10 ஆண்டுகள் கடந்துள்ளன. அவரது நினைவு நாளில் அவர் மனைவி தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனது கணவரின் இறப்புக்குப் பின் தன் இரு மகள்களுடன் பொருளாதார ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


தனது மூத்த மகள் +2 மற்றும் இளைய மகள் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களின் படிப்பு செல்வுக்காக நிறைய கஷ்டப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். 


சிவகார்த்திகேயன் செய்த உதவி 


இந்த தகவலை தெரிந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் ராசு மதுரவனின் குடும்பத்தினரை தொடர்புகொண்டார். மேலும் ராசு மதுரவனின் இரு மகள்களின் ஒரு ஆண்டிற்கான கல்வி கட்டணமாக ரூ.97,000 பணத்தை மொத்தமாக செலுத்தினார். ”என் கணவர் இயக்கிய படங்களில் நடித்த எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் எந்த வித சம்பந்தமும் இல்லாத சிவகார்த்திகேயன் எங்கள் நிலைமையை தெரிந்துகொண்டு என் மகள்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தியிருப்பது ரொமப் சந்தோஷம் அளிக்கிறது” என்று ராசு மதுரவனின் மனைவி பவானி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் செய்த இந்த உதவிக்காக அவருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன


வசந்தபாலனுக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்


சிவகார்த்திகேயனை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குநர் வசந்தபாலன் எஸ்.கே குறித்து மற்றுமொறு தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். "2021-ஆம் ஆண்டு கொரோனா இரண்டாவது அலையில் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து பலரும் திரையுலகில் உதவ முன் வந்தனர்.அவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். பணம் தேவையா என்று கேட்டதே பெரும் மகிழ்ச்சி சார் ! நான் மெடிகிளைம் பாலிசி போட்டிருந்ததால் அதுவே கவராகி விட்டது என்று நன்றி கூறினேன்.


ராசு மதுரவன் போன்று நானும் அவரோடு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாதன். ஏற்றத்தாழ்வு கொண்ட பொருளாதார கட்டமைப்பை அன்பின் தேர்தான் வழி நடத்தி செல்கிறது. சிவகார்த்திகேயனுக்கு நன்றி!" என வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்