நானும், விஷாலும் கெஞ்சி பார்த்தாலும் மதகஜராஜா படத்தை தயாரிப்பு நிறுவனம் தர மறுப்பதாக இயக்குநர் சுந்தர்.சி வேதனை தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி அவ்வப்போது படங்களை இயக்குவதோடு, பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதனிடையே இவர் தன்னுடைய அரண்மனை படத்தின் 4 ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் என பலரும் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். 


இதனிடையே இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் சுந்தர் சி.யிடம் அவர் இயக்கி நீண்ட வருடங்களாக வெளிவராமல் இருக்கும் மதகஜராஜா படம் எப்போது ரிலீசாகும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர்களிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நானும் விஷாலும் பணம் கொடுத்து அப்படத்தை வாங்கி கொள்கிறோம் என கெஞ்சி கேட்டும் தயாரிப்பு நிறுவனம் தர மறுத்து விட்டது.






இப்ப வந்தாலும் அந்த படம் ரசிகர்களை மகிழ்விக்கும் அளவுக்கு சூப்பராக இருக்கும். என்ன காரணம் என தெரியவில்லை. அந்த தயாரிப்பாளர் அவரின் முந்தைய படத்தின் கடன் பிரச்சினையால் இப்படத்தை நிறுத்தி வைத்து விட்டார். மத கஜ ராஜா படம் மேல் கடன் இருந்தால் எங்க மேல தப்புன்னு வருத்தப்படலாம். இப்படம் இன்றைக்கும் வசூல் ரீதியாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் தயவு செஞ்சி என் சார்பாக தயாரிப்பாளர்களிடம் நீங்களும் பேசுங்கள்” என தெரிவித்தார். 


2013 ஆம் ஆண்டு ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் மற்றும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து “மத கஜ ராஜா” என்ற படத்தை தயாரித்தது. இப்படத்தை சுந்தர் சி இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்தார். இப்படத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, சோனு சூட், பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.