இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப்படுத்த உள்ளது.
தமிழ்சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவருக்கு பிரபல வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப்படுத்த உள்ளது.
கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஷங்கர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்தார்.கல்லூரி நாட்களில், எழுதத்தொடங்கிய இயக்குநர் ஷங்கர், பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இதற்காக அவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தன. அங்கு அவருக்கு கிடைத்த உத்வேகம் அவரை நடிப்பின் பக்கம் திருப்பியது. அதன் பின்னர், நாடக குழு ஒன்றில் இணைந்த அவர், அங்கு 5 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். இவரின் திறமை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. இதனைய்டுத்து அவர் அவரை உதவியாளராக அழைத்து சேர்த்துக்கொண்டார்.
தொடர்ந்து வெளி வந்த ‘காதலன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ’முதல்வன்’, ’சிவாஜி’, ‘எந்திரன்’ என இவர் எடுத்த பல திரைப்படங்கள் வணிகரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றன. பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளையும் வென்றுள்ளன. தற்போது ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கிவரும் ஷங்கர் தயாரிப்பாளராகவும் பல படங்களையும் தயாரித்து இருக்கிறார்.
இவரது மகள் அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘விருமன்’ படத்தில் அறிமுகமாகிறார்.
இன்றைய இளைய தலைமுறையினருக்கும் நாளைய படைப்பாளர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் அவருக்கு வேல்ஸ் பல்கலைகழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்து இருக்கிறது.