முத்த மழை பாடலை பாராட்டிய செல்வராகவன் 

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் மொழிகளை கடந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலை யார் சிறப்பாக பாடியிருப்பது என்பது குறித்து சின்மயி மற்றும் தீ ரசிகர்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. ஆனால் பாடகி சின்மயி தீ குரலை தனித்துவமானது என்றும் எதிர்காலத்தில் தீ 100 சின்மயிகளை விட சிறப்பான பாடகியாக இருப்பார் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். 

முத்த மழை பாடலை பாராட்டி இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் - உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் - நம் A.R. ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும்." என இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகாலத்தில் வெளியாகும் திரைப்படங்களை தொடர்ச்சியாக கவனித்து அதில் தன்னை கவர்ந்தவற்றை பாராட்டி பதிவிட்டு வருகிறார் செல்வராகவன் . அந்த வகையில் முன்னதாக மாமன்னன் படத்தில் இடம்பெற்ற 'நெஞ்சமே நெஞ்சமே' பாடலை இதேபோல் அவர் பாராட்டி பதிவிட்டிருந்தார். சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான 'துடரும்' படத்தையும் மோகன்லாலின் நடிப்பை பாராட்டியும் அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. 

செல்வராகவன் இயக்கும் மெண்டன் மனதில் 

துள்ளுவதோ இளமை , காதல் கொண்டேன் , புதுப்பேட்டை , ஆயிரத்தில் ஒருவன் போன்ற தனித்துவமான படங்களை இயக்கியவர் செல்வராகவன். கடைசியாக இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்து 'நானே வருவேன்' படம் வெளியானது. தற்போது 7ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். அடுத்தபடியாக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில் ' படத்தை இயக்கவிருக்கிறார்.