தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார். இவர் சமீபத்தில் தவெக-வில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், சசிகுமார் தனியார் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
தவெக-வில் இணைகிறேனா?
இது பயங்கரமான வதந்தியாக இருக்கிறதே. நமக்கு அரசியல் வராது. நமக்கு அரசியலும் தெரியாது. முதலமைச்சர் விஜய்யை வைத்து நான் இயக்க வேண்டும் என்று நினைத்த வரலாற்று கதை சொன்னேன். எனக்கு அவரை வைத்து படம் பண்ண முடியவில்லை என்று ஒரு வருத்தம். மற்றபடி அவர் முதலமைச்சர் ஆனதில் எனக்கு மகிழ்ச்சி.
வருத்தம்:
ஆனால், அந்த கதை பண்ண முடியவில்லை என்ற வருத்தம் ஒரு இயக்குனராக எனக்கு உள்ளது. அந்த வரலாற்று கதை அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. அந்த கதை அவரே தயாரிப்பாளருக்கு ஏற்பாடு செய்தார். அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது என்று சொன்ன கதை. சு.வெங்கடேசன்தான் கதை எழுதினார். சு.வெங்கடேசனுக்கு கை கொடுத்து நல்ல உருவாக்கியிருக்கிறீர்கள் என்று பாராட்டினார்.
லொகேஷன் எல்லாம் பார்த்து இருந்தேன். ஆனால், அப்போது அதை பண்ண முடியவில்லை. பட்ஜெட் பெரியதாக இருந்தது. பின்னர் பண்ணிக்கொள்ளலாம் என்று இருந்தோம். அவரோட தன்னம்பிக்கையால் அவர் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். தான் வருவேன் என்ற நம்பிக்கையால் ஆகியிருக்கிறார். அதில் யாரும் பங்கு போட முடியாது. குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்து இந்தளவு போயிருப்பது அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விஜய்யை இயக்க முயற்சி:
பாலாவின் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சசிகுமார் சுப்ரமணியபுரம் படம் மூலமாக இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். அந்த படம் மொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில் கிராமப்புற நாயகனாக தொடர்ந்து நடிகராக சசிகுமார் அசத்தினார்.
இவர் இயக்குனராக சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு ஈசன் படத்தை இயக்கினார். அதன்பின்பு தற்போது வரை எந்த படத்தையும் அவர் இயக்கவில்லை. நடிப்பிலே முழு கவனம் செலுத்தி வந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரை வைத்து இயக்குவதற்கு சசிகுமார் முயற்சித்தார். ஆனால், அது கைகூடாததை கருதி அவர் தற்போது வருத்தத்துடன் பேசியுள்ளார். சசிகுமார் குறிப்பிடும் திரைப்படம் வேள்பாரி என்று பலரும் கூறிவருகின்றனர். வேள்பாரி படத்தில் தொடக்கத்தில் கதாநாயகனாக நடிக்க விஜய்யை அணுகியதாக தகவல்கள் வெளியாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
