தயாரிப்பாளர் பதவியை அண்ணன் அமீர் தான் உங்களுக்கு விட்டுக் கொடுத்தார் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். 

ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு:


பருத்தி வீரன் ரிலீசாகி 16 ஆண்டுகள் கடந்த பின்பும், அதன் மீதான சர்ச்சை இன்றும் ஓயவில்லை. கார்த்தி முதன் முதலில் ஹீரோவாக நடித்த பருத்தி வீரன் படத்தை இயக்குநர் அமீர் இயக்கி இருந்தார். படம் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த நிலையில் பருத்திவீரன் படத்தால் தனக்கு ரூ.2 கோடி வரை கடன் ஏற்பட்டதாக அமீர் கூறியிருந்தார். அமீரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஞானவேல்ராஜா, பருத்திவீரனின் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ரூ.2.76 கோடியில் பட்ஜெட் என சொல்லி விட்டு ரூ.4 கோடி வரை அமீர் செலவு செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். 

 

இந்த விவகாரம் விஸ்வரூபமாக வெடித்து வரும் நிலையில், ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் சமுத்திரக்கனி வெளியிட்ட பதிவில், “ அமீர் அண்ணன் பத்தி நீங்க பேசன வீடியோவ இப்பதான் பார்த்தேன்! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ. தப்பு தப்பா பேசியிருக்கீங்க. கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன் சொல்றேன்னா..அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் இருந்தவன் நான்... எல்லா பிரச்சனையும் எனக்கு தெரியும்...

 

ஆறு மாசம் பருத்தி வீரன் படப்பிடிப்பிலே இருந்துருக்கேன். ஆனா உங்கள ஒருநாள் கூட அங்க பாத்து இல்ல. நான் தான் தயாரிப்பாளர். நான் தான் தயாரிப்பாளர்ன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க. உங்கள தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்தியை ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன். எந்த நன்றி விசுவாசமும் இல்லாம பேசி இருக்கீங்க பிரதர். தப்பில்லையா..? எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்..? பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்போதெல்லாம் சரி நமக்கெதுக்கு, அவங்களே பேசிக்குவாங்க.. அவங்களே தீத்துக்குவாங்க... அப்படின்னு தான் நான் இருந்தேன். ஆனா இந்த முறை அப்டி இருக்க முடியல...ரொம்ப கஷ்டமா இருக்கு...

 

அண்ணன் இந்த படத்துக்காக எவ்ளோ உழைச்சிருக்கார். எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கார்னு எனக்கு தான் தெரியும். ஏன்னா கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கைய விரிச்சிட்டீங்க. என்னால தயாரிக்க முடியாது. பணம் இல்ல அப்படின்னு. சகோதரர் சூர்யா வந்து படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர் அண்ணா அப்படின்னு சொல்லிவிட்டு போய்ட்டார். அதன்பிறகு அந்த படம் முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும் அமீர் அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள், இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் அவர் சொல்ல சொல்ல போய் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், ரெண்டு லட்சம்ன்னு வாங்கிட்டு வந்தவன் நான். இது இல்லாம தம்பி சசி கூட கொஞ்சம் பணம் கொடுத்திருக்கான் பிரதர் அந்த படத்துக்கு....

 

50, 60 பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் அந்த படம் எடுத்து முடிச்சோம். ஆனால், கடைசியா நீங்க வந்து அந்த தயாரிப்பாளர் சட்டையை போட்டிக்கிட்டிங்க...உண்மையிலேயே யார் தயாரிப்பாளர்..? சொல்லுங்க..! தயாரிப்பாளர் பதவிய அண்ணன் அமீர் உங்களுக்கு விட்டுக் கொடுத்தார். “ என அமீர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.