பாபா பிளாக்‌ ஷீப் படத்தில் நடிகை அபிராமியின் நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் கண் கலங்கியதாக அப்படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 


ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில் உருவாகி வரும் படம் “பாபா பிளாக்‌ ஷீப்”.  பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் மிக முக்கியமான கேரக்டரில் நடிகை அபிராமி நடித்துள்ளார். அதேபோல் மதுரை முத்து, RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.


பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள்,  துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான படமாக இது இருக்கும் என இயக்குநர் ராஜ்மோகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக  இயக்குநர் ராஜ்மோகன் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.  “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தில் பள்ளி பயிலும் குழந்தைக்கு அன்னையாக வரும் கதாபாத்திரம் ஒன்று இருந்தது.


 இப்பாத்திரத்திற்காக  நடிகை அபிராமியை அணுகினேன். முழுக்கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. உடனடியாக நான் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார் என ராஜ்மோகன் கூறியுள்ளார். 


மேலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காட்சியில் மிகவும் உணர்ச்சிகரமான நடித்த அபிராமியின்  நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை திரையில் பார்க்கும் போது ரசிகர்களும் கண்டிப்பாக கண்கலங்குவார்கள் எனவும், இப்படம் நடிகை அபிராமிக்கு  மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் எனவும் இயக்குநர் ராஜ்மோகன் செய்துள்ளார்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவாக நடந்துள்ள நிலையில் விரைவில் டீசர் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.