சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது
“இந்த படத்திற்கு வள்ளுவன் என தலைப்பு வைத்து அவரது குறளை மையமாக வைத்து படத்தையும் எடுத்துள்ளார் இயக்குநர் சங்கர் சாரதி.. அதேசமயம் கெட்டது செய்தவனுக்கு நல்லது செய் என்று எழுதிய வள்ளுவன் பெயரை வைத்து கொலைகாரன் படம் எடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத படங்களில் ஆங்கில டைட்டில் தான் இருக்கிறது. இது தமிழ்நாடா என்கிற கேள்வியே வந்து விட்டது. இந்த சமயத்தில் இப்படி வள்ளுவன் என தலைப்பு வைத்திருப்பதால் இயக்குநர் சங்கர் சாரதியை பாராட்டுகிறேன். பணம் இருந்தால் நீதியையே இப்போது விலைக்கு வாங்கி விடலாம். நீதிபதிகள் பலர் இப்போது பாதிபதிகளாகி விட்டார்கள்” இன்று பேசினார்.
இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது
தவறு செய்தவர்களை கண்டித்து திருத்த வேண்டும் என்கிற கருத்தைச் சொல்ல வள்ளுவரை உதாரணமாக இயக்குநர் சங்கர் சாரதி எடுத்துக் கொண்டுள்ளார். இதனாலேயே இவர் சென்சாரில் தப்பித்து விட்டார். அந்த வகையில் எங்கள் இயக்குநர் சங்கத்திலிருந்து வள்ளுவன் என்கிற டைட்டிலுடன் அவர் கையில் எழுத்தாணிக்கு பதிலாக கத்தியை கொடுத்து ஒருவர் துணிச்சலாக படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் இயக்கிய டெக்னிக் நன்றாக இருந்தது. கதாநாயகன் சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார். அவர் நன்றாக வரவேண்டும்” என்று பேசினார்
நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது
“இந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் சாரதி என்னை அழைத்தபோது முதலில் வர மறுத்துவிட்டேன். அவர் சரியாக 2023 அக்டோபர் 25ஆம் தேதி என்னை அழைத்தார். அன்று கேப்டனின் பிறந்த நாள். மீண்டும் என்னை வற்புறுத்தி அழைத்ததால் கேப்டனிடம் சென்று அனுமதி பெற்று, ஆசி பெற்று மதியத்திற்கு மேல் படப்பிடிப்பில் சென்று கலந்து கொண்டேன். அந்த வகையில் என் வாழ்க்கையில் இந்த படம் மறக்கவே முடியாது. சினிமாவில் நான் இருப்பதே கடவுள் கொடுத்த கொடுப்பினை. இப்போதுள்ள இயக்குநர்கள் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு வந்து சினிமா வாய்ப்பை பெற்றுக்கொண்டு சினிமா கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. தயவு செய்து அந்த கலாச்சாரத்தை மாற்றாதீர்கள்” என்று பேசினார்
நடிகர் பரத் பேசும்போது,
“சினிமாவில் நாம் இருப்பதே ஒரு பெரிய வரம் தான். அப்படிப்பட்ட சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் நாமாகவே பிடித்து முன்னேறுவது என்பது எவ்வளவு சிரமம் என்று அப்படி வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நல்ல வலுவான அரசியல் கலந்த ஒரு கருத்து இந்த படத்தின் டைட்டில் துவங்கும்போதே ஆரம்பிக்கிறது. கதையை இயக்குநர் என்னிடம் சொன்னாலும் அந்த சமயத்தில் என்னுடைய வேறு சில கமிட்மென்ட்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நடிகர் சேத்தன் சீனு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடிக்கிறார். அவருக்கு தமிழில் இது மிகப்பெரிய பிரேக்காக அமையும். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா என்னுடன் காளிதாஸ், காளிதாஸ் 2, மிரல் என மூன்று படங்களில் வேலை பார்த்தவர்” என்று கூறினார்.
மிரட்டி ஊதிய உயர்வு வாங்குகிறார்கள்
இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசும்போது “படத்தின் அழைப்பிதழ் கொடுத்து என்னை அழைத்தபோது அதைப் பார்த்ததும் இது ஒரு டாக்குமெண்டரி படம் போல இருக்கிறதே என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் டிரைலரைப் பார்த்ததும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கே இந்த படம் குறித்து ஆரம்பத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது இல்லையா ? அதனால் இந்த படத்தை பற்றி மீடியா புரமோஷன்களில் பேசும்போது, இது எந்த மாதிரியான படம் என்பதை தெளிவாக ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி என்றால் தான் அந்த தரப்பு ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க தேடி வருவார்கள். இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் புதிய தயாரிப்பாளர்கள் தான்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 2500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2100 பேர் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் அப்படி முதல் படம் எடுத்த 2000 பேர் அப்படியே போய் விட்டார்கள். வெறும் 400 பேர் தான் மீண்டும் படம் எடுக்கத் திரும்பி வருகிறார்கள்.
ஒரு மரம் நட்டால் வளர்ந்து பிறகு பல வகைகளில் பலன் தரும்.. எதுவுமே இல்லை என்றாலும் நிழல் தரும் வேலையையாவது செய்யும். இசையமைப்பாளர்களுக்கு கூட அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் குடும்பத்திற்கும் செல்லும் விதமாக ராயல்டி பணம் வந்து கொண்டிருக்கும்.. ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை அப்படி அல்ல.. நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீதம் தொகையைத் தங்களை ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்குத் தர வேண்டும் என ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள்.
இன்றைய சூழலில் வெட்கம், மானம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்னதைப்போல இன்னா செய்தவருக்கு இனியவை செய்ய முடியாது. திருப்பி இன்னா தான் செய்ய முடியும். மற்ற பல நாடுகளுக்குச் செல்லும்போது எல்லா பொது மக்களையும் ராஜா போல நடத்துவார்கள். குற்றவாளிகளை கிரிமினல்களாக நடத்துவார்கள். ஆனால் இங்கே சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருக்கிறது. ஆனால் குற்றவாளி வந்தால் அவனை ராஜா போல பார்க்கிறார்கள். நம்முடைய சிஸ்டம் அப்படி இருக்கிறது.
நான் ஒரு படத்திற்காக சிறைச்சாலை சென்று கைதிகளை சந்தித்தபோது, ஒரு கொலைக் கைதியிடம் திட்டமிட்டுக் கொலை செய்தாயா? என்று கேட்டேன். அதற்கு அவன் திட்டமிட்டு கொலை செய்தால் அவர்கள் வெளியே இருக்கலாம் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்கள் தான் இங்கே உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொன்னார். அதைத்தான் இந்த படத்தில் அழகான கருவாக எடுத்து இருக்கிறார்கள்.
சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ரொம்பவே ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகிறது ? அமெரிக்காவில் என்னுடைய மகள் தற்போது ஏஐ தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் என்னிடம் மனித குலத்திற்கே எதிரான ஒரு விஷயத்தைத் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எல்லோர் கையிலும் கத்தி இருக்கும். அவனுக்கான நீதியை அவனே தேடிக் கொள்ளும் சூழலுக்கு நாடு தள்ளப்படும். இந்த படத்தில் அதைத்தான் சொல்கிறார்கள். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவதில்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது பிளாக் மெயில் செய்து உயர்வான ஊதியத்தை பெறுகிற சூழல் தான் இங்கே இருக்கிறது” என்று பேசினார்