ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் 39வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளான இன்று வெளியானது. இதனை சூர்யா தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் படத்தைத் தயாரிக்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ராஜ்சேகர் பாண்டியன் படத்தின் தலைப்புக்கு நன்றி என இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். படத்தின் தலைப்புக்கு இயக்குநர் ரஞ்சித் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் அவர் இந்த பதிலை அளித்துள்ளார்.






முன்னதாக, தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வரும் அவரது 39வது படத்துக்கு ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யா இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக்கின் வழி தெரியவந்துள்ளது. மேலும் ’ஜெய் பீம்’ என்றால் என்ன? அந்த டைட்டிலுக்கும் சூர்யாவின் கதாப்பாத்திரத்துக்கும் என்ன தொடர்பு என்று கூகுளில் அவர் ரசிகர்கள் பலர் தேடி வருகின்றனர்.






பொதுவில் ’ஜெய் பீம்’ என்கிற சொல் பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் பயன்படுத்தும் சொல்லாடல். பீம் என்றால் அம்பேத்கரைக் குறிப்பது. ஜெய் என்றால் இந்தியில் வெற்றி என்று பொருள். ஜெய் பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி என்பது பொருள். 1936ல் அம்பேத்கரின் பிறந்தநாள் சமயத்தில் மும்பை சால் பகுதியில் அவரது ஆதரவாளர் ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜெய்பீம் எனச் சொன்னதாகவும். பிறகு பெரும்பான்மையான மக்கள் அந்தச் சொல்லை உபயோகிக்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 1 ஜனவரி 1818ல் கோரேகான் போர் சமயத்தில் பீமா நதியைக் கடந்த வீரர்கள் ஜெய்பீம் என முழங்கிச் சென்றதாலும் இந்த பெயர் உருவானதாக கூறப்படுகிறது. அம்பேத்கர் ஒவ்வொரு வருடமும் கோரேகான் பகுதிக்குச் சென்று போர் நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தி வந்தார். இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, பொருளாதார வல்லுநர், பெண்ணியவாதி, கல்வியாளர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒற்றைக்குரலாக ஒலித்தவர் பாபாசாகேப் அம்பேத்கர். மிகமுக்கியமாக இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களில் முதன்மையானவர். தற்போது அவரது பெயரையொட்டிதான் சூர்யாவின் 39வது படத்துக்கும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் அவரது 40வது திரைப்படத்துக்கான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ‘எதற்கும் துணிந்தவன்’ என அந்தத் திரைப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூர்யா40 திரைப்படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தில் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றாகச் சேர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது, சூர்யாவின் பிறந்தநாள் நாளை அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சூர்யா40 திரைப்படத்தில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். படம் முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.