உஸ்தாத் பகத் சிங் பட நிகழ்ச்சியில் தன்னுடைய சாதி குறித்து பார்த்திபன் பேசியது சர்ச்சையான நிலையில் அவருக்கு இயக்குநர் மோகன் ஜி ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

தெலுங்கில் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள படம் “உஸ்தாத் பகத் சிங்”. இந்த படத்தில் ராஷி கண்ணா, ஸ்ரீலீலா இருவரும் ஹீரோயினாக நடித்துள்ளனர். பார்த்திபன் வில்லன் ரோலில் இடம் பெற்றிருக்கிறார். இப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் தெலுங்கு மொழியில் தன் கருத்துகளை தெரிவித்தார். 

சாதி பற்றி பேசிய பார்த்திபன்

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன்னுடைய பெயரை சொல்லி விட்டு நான் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவன் எனவும், சென்னையில் வளர்ந்ததால் தன்னால் முழுவதுமாக தெலுங்கில் பேச தெரியாது எனவும் கூறினார். படத்தின் வெற்றி விழாவில் நிச்சயமாக சரளமாக தெலுங்கில் பேசுவேன் எனவும் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியது. தமிழ்நாட்டில் புரட்சி பேசிவிட்டு அண்டை மாநிலத்திற்கு சென்றால் சாதி பெருமை பேசுகிறார்கள் என சகட்டுமேனிக்கு இணையவாசிகள் விமர்சித்தனர். 

Continues below advertisement

ஆனால் இதற்கு பதிலளிக்கு வகையில், அதே நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவுக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன், அந்த திரையுலகம் இல்லாவிட்டால் உங்கள் முன் நானில்லை என தெரிவித்திருந்தார். எனினும் தொடர்ச்சியாக பார்த்திபனை விமர்சித்தனர். 

ஆடியோ மூலம் மன்னிப்பு

இந்த  நிலையில் ஆடியோ மூலம் பார்த்திபன் தன் பேச்சால் யாரும் காயப்பட்டிருந்தால் மன்னிக்குமாறு கூறியிருந்தார். அதில் என் தாய்மொழி தெலுங்கு தான் என்றாலும், நான் வாழ்க்கைப்பட்டிருப்பது தமிழுக்கு தான் என பேசியிருந்தார். இப்படியான நிலையில் பார்த்திபன் பேச்சை குறிப்பிட்டு பிரபல இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதைதான் பெரியாரும் செய்தார், சொன்னார்.. அவரை மட்டும் கொண்டாடும் இந்த தமிழ் சமூகம் இவரை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள்.. தமிழ்நாட்டில் நம்மை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் பாதிக்கும் மேல் தமிழர் அல்லாதவர்கள், சாதியை தூக்கி பிடிப்பவர்கள் தான்.. இப்ப மட்டும் என்ன குதிக்கிறானுங்க” என தெரிவித்துள்ளார். 

இதேபோல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தனது பதிவில், “நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தான் யார் ,தன் வேர் எது என்பதை மறவாமல் இருக்கும் இயக்குனர் பார்த்திபன் அவர்களின் தெலுங்கு மொழிப்பற்று பாராட்டுக்குரியது . தன் அடையாளத்தை மறைக்காமல் வெளிப்படுத்தும் அவரைப் போல அனைவரும் அவரவர் தாய்மொழிக்கும், இனத்திற்கும் உண்மையும் நேர்மையும் இருத்தால் நல்லது" என ஆதரவு தெரிவித்துள்ளார்.