துருவ் விக்ரம் நடித்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனுபமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன் , லால் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். பைசன் படத்தின் இரண்டாவது பாடல் அண்மையில் வெளியானது. ராப் பாடகர் அறிவு மற்றும் கேரள ராப் பாடகர் வேடன் இந்த பாடல்களை பாடியுள்ளார்கள். பாலியல் குற்றம் சாட்டப்பட்ட வேடனை பாட வைத்ததற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பைசன் படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித்தை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்
பாலியல் சர்ச்சையில் சிக்கிய வேடன்
கேரளம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் பிரபலமாகி வருபவர் இளம் ராப் இசை கலைஞர் வேடன். இவர் வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் என்கிற ஆல்பம் மூலம் பிரபலமானார். சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக தனது பாடல்கள் எழுதியும் பாடியும் வருகிறார். அண்மையில் கஞ்சா வைத்திருந்த காரணத்தினால் இவர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். மேலும் பல்வேறு பெண்கள் வேடன் மீது பாலியல் குற்றசாட்டுகளை வைத்துள்ளார்கள். 2021 முதல் 2023 ஆம் ஆண்டுகுட்பட்ட காலத்தில் வேடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக கொச்சி திரிக்காக்கராவின் பெண் மருத்துவர் ஒருவர் புகாரளித்திருந்தார். 2023 ஆம் ஆண்டு முதல் வேடன் தன்னை தவிர்த்ததாகவும் மற்ற சில பெண்களுடனும் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பாலியல் உறவு இருதரப்பினரின் சம்மதத்துடன் நடந்ததாக வேடன் தரப்பில் கூறப்பட்டது. அதேபோல் ஆராய்ச்சி மாணவி ஒருத்தரும் வேடன் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லாமல் வேடதை கைது செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்து அவருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது
வேடன் மீதான பாலியல் வழக்குகள் விசாரணையில் இருந்து வரும் நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் அவருடன் பணியாற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதுகுறித்து சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.