விக்ரம் படம் வெளியான பிறகு ஒரு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  கமல்ஹாசன் வீட்டு பணிப்பெண்ணாக நடித்து, பிற்பாதியில் ரா ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் அதிரடி காட்டியிருப்பார் நடன கலைஞர் வசந்தி. இவரது ஏஜெண்ட் டினா கதாபாத்திரம் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தோசை சுட்டுக்கொண்டு முதல்பாதியில் காட்டப்பட்ட ஒரு கதாபாத்திரம் திடீரென பாய்ந்து பாய்ந்து சண்டையிட்ட காட்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.


சிறிய காட்சியில் வந்தாலும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார் ஏஜெண்ட் டினா. இந்நிலையில் தனது படத்தில் வரும் கதாபாத்திரங்களை வைத்து யுனிவர்ஸ் பாணியில் அடுத்தடுத்த படங்களை இயக்கும் இயக்குநர் லோகேஷ், ஏஜெண்ட் டினாவுக்கு ஏதும் சினிமா வைத்திருப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை மாணவி ஒருவர் நேரடியாகவே லோகேஷிடம் கேட்டார். 






லோகேஷ் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நிலையில் அங்கிருந்தவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது ஏஜெண்ட் டினா குறித்து கேள்வி எழுப்பிய பெண்  ஒருவர், ஏஜெண்ட் டினா கதாபாத்திரத்தை வைத்து அவரது தொடக்ககாலம் மாதிரியான கதையை முன்னணி நாயகியை வைத்து இயக்குவீர்களா எனக் கேட்டார்.


அதற்கு பதிலளித்த லோகேஷ், 


 "அதே ஆசை எனக்கும் இருக்கு. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரமாகவே எஜெண்ட் டினாவை வைத்தேன். எதிர்வரும் என்னுடைய படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கும் மேலும் முக்கியத்துவத்தை தருவேன். அதற்கான பொறுப்பும் எனக்கு வந்திருக்கிறது. ஏஜெண்ட் டினாவின் முன்கதைக்கு சரியான கதைக்களம் அமைந்தால் நிச்சயம் நான் திரைப்படம் இயக்குவேன்" என்றார்.


இந்நிலையில் ஏஜெண்ட் டினாவின் இளமை கதாபாத்திரத்துக்கு நடிகை ஆண்ட்ரியா சரியாக இருப்பார் என சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது விஜய் படத்துக்காக தன்னுடைய ஸ்கிரிப்ட் வேலையை தொடங்கியுள்ள லோகேஷ் , அனைத்துவிதமான சோஷியல் மீடியாவில் இருந்தும் தற்காலிகமாக கேப் எடுத்துள்ளார். படத்துக்கான வேலைகளை முடித்துவிட்டு படம் தொடர்பான தகவலோடுதான் மீண்டும் சோசியல் மீடியா பக்கம் வரப்போகிறார் லோகேஷ்.