அஜித்தை வைத்து எடுத்த ஜி படம் ஓடாது எனக்கு நன்றாகவே தெரியும் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். 


கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி கடந்த 2005 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து “ஜி” என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் த்ரிஷா, மணிவண்ணன், சரண்ராஜ், வெங்கட்பிரபு என பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த ஜி படம் படுதோல்வியடைந்தது. இதனிடையே இயக்குநர் லிங்குசாமி  ஜி பட ஷூட்டிங்கில் என்ன நடந்தது என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


நினைத்த நேரத்துக்கு படம் நடக்கவில்லை


சென்சார் படத்தில் ஒரு படத்தின் விதிகள் இன்னொரு படத்துக்கு பொருந்தாது என சொல்வார்கள். அந்த மாதிரி ஒவ்வொரு படத்தின் விதிகள் என்பது மாறுபடும். எல்லா படமும் புதுப்படம் தான். நான் ஒரு படத்துக்குள்  எவ்வளவு தூரம் இணைந்திருந்தேன், சிக்கல் இல்லாமல் இருந்தது என்பதெல்லாம் வெற்றி மற்றும் தோல்வி அடைந்த படங்களுக்கு எனக்கு தெரியும். ஆனந்தம், ரன் படங்கள் பண்ணும்போது நான் எவ்வளவு உண்மையாக இருந்தனோ அதனுடைய வெற்றி ஸ்கிரீனில் தெரியும். 


பீமா படம் பண்ணும்போது நான் நினைத்த நேரத்துக்கு படம் நடக்கவில்லை. ஜி படம் பண்ணும்போது அஜித்துக்கு அந்த படத்தில் நடிக்கவே விருப்பமில்லை. அது என்னுடைய படம் மட்டும் இல்லை. கார் ரேஸில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த படத்தின் தயாரிப்பாளர் கையில் பணம் இல்லை. நேரத்துக்கு ஷூட்டிங் நடக்கவில்லை. இதனை மட்டுமே பழி போட்டு நான் தப்பிக்க விரும்பவில்லை. இப்படியான சூழல் இருக்கும்போது என்னுடைய எண்ணங்கள் காணாமல் போய் விடும். அஜித்திடம் நான் 2 கண்டிஷன்கள் போட்டேன். தாடி ஒரிஜினலாக வைக்க வேண்டும், உடம்பை குறைக்க வேண்டும், பொது இடங்களில் தான் ஷூட்டிங் செய்வேன் என தெரிவித்தேன். 


அஜித்தை தாக்கிய ரசிகர்கள்


என்னை வைத்து பொது இடத்தில் ஷூட் செய்ய முடியாது என சொன்னார். அது நிஜம் தான். அப்படி ஒரு ரசிகர்கள் அஜித்துக்கு உள்ளனர். கோவையில் அஜித்தை வைத்து சண்டை காட்சி படமாக்கும்போது ரசிகர்கள் ஆர்வத்தால் அவரின் கைகளில் கீறி இரத்தமே வந்து விட்டது. எனக்கு அந்த கதையை பொது இடங்களில் தான் எடுக்க தோன்றியது. மேலும் என்னுடைய உதவி இயக்குநர்களால் தான் நான் அப்படத்துக்கு அஜித்தை ஓகே செய்தேன். ஜி படத்தின் ஹீரோ கேரக்டரில் அஜித்தை பொருத்தி பார்க்கவே முடியவில்லை. அந்த படம் ஷூட்டிங்கின் போது பிலிம் ரோலை எதாவது இயற்கை பேரிடர் அழித்து விடாதா என வேண்டியிருக்கிறேன். ஜி படம் ஓடாது எனக்கு நன்றாகவே தெரியும். அந்த காலக்கட்டத்தில் தனக்கு டைம் சரியில்லை என அஜித்தே நம்பினார். எனக்கே அந்த படம் எப்படா முடியும் என தோன்றியது.