இல்லாத சாதிய வச்சு படம் எடுக்காதீங்க...கெளதம் மேனன் சர்ச்சை பேச்சு
இன்றைய சூழலில் யாரும் சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றி கதைகளை பார்க்க விரும்பவில்லை என கெளதம் மேனன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கெளதம் மேனன்
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , வாரணம் ஆயிரம் , விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது மலையாளத்தில் மம்மூட்டி நடித்துள்ள Dominic and the Ladies Purse' படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கெளதம் மேனன் சாதிய பிரச்சனைகளை மையப்படுத்து எடுக்கப்படும் படங்களைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவரது கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
சாதி இன்னைக்கு இல்லை
" நான் படங்களின் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இன்றைய சூழலில் சாதி இல்லை என்று தெரிந்தும் அதை மையப்படுத்திய கதைகளை படமாக எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்றைய சூழலில் இந்த மாதிரி படங்களை எடுக்க முடியாது என்பதால் 1980 , 90 களில் நடந்ததாக இந்த படங்களை எடுக்கிறார்கள். இந்த கதைகள் எல்லாம் சொல்லப்பட வேண்டியதில்லை என்று எனக்கு தோன்றுகிறது. அதே மாதிரியான ஒரு கதையை இன்று நம்மால் சொல்ல முடியாது. யாருக்கும் அந்த மாதிரியான கதை தேவையில்லை. " என கெளதம் மேனன் பேசியுள்ளார். " அவரது இந்த கருத்தை பலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள். மேலும் சாதியை வைத்து படம் எடுக்கிறார்கள் என கெளதம் மேனன் இயக்குநர் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியவர்களின் படங்களை குறிப்பிட்டு சொல்கிறார் என பலர் சுட்டிகாட்டியுள்ளார்கள்
Just In