இயக்குநர் பாக்யராஜ் இன்று அதிகாலை லேசான நெஞ்சு வலியால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். கடந்த வாரம் இயக்குநர் இமயம் பாரதிராஜாவைத் தொடர்ந்து இந்த வாரம் பாக்யராஜின் இழப்பு தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாக்யராஜ் இன்று காலமானதை பலரும் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். வயதான போதிலும் தொடர்ச்சியாக திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலகலப்பாக பேசி வந்தார் பாக்யராஜ். அந்த வகையில் அவர் கடைசியாக சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனது படத்திற்கு வந்த சென்சார் பிரச்சனை குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது
பாக்யராஜின் கடைசி மேடைப் பேச்சு
குடும்ப உறவுகளில் பலரும் பேச தயங்கும் விஷயங்களை தனது படங்களில் நகைச்சுவையான சொல்லும் விதத்திற்கு பாக்யராஜ் படங்கள் பெயர்போனவை. மக்கள் தலைவா என்கிற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாக்யராஜ் தனது படத்திற்கு தான் எதிர்கொண்ட சென்சார் பிரச்சனை குறித்து கலகலப்பாக பேசியிருந்தார். " என்னுடைய படத்திற்கு என்றால் நான்கு பெண்களை சென்சாருக்கு அனுப்புவார்கள். என்னுடைய மெளன கீதம் படத்தில் ஒரு காட்சி வரும். சரிதா குளித்துவிட்டு வந்து தனது கணவரிடம் ஜாக்கெட் ஹூக் மாட்டிவிட சொல்வார். அதற்கு கணவர் நான் அவசரமாக ஆபிஸூக்கு கிளம்பிட்டு இருக்கேன். இப்போ வந்த் இதமாட்டு அதமாட்டுனு சொல்ற என்று சொல்வார். அதற்கு மனைவி கழட்றப்போ மட்டும் ராத்திரி வேகமாக கழட்றீங்க என்று சொல்வார். இதனை சென்சார் அதிகாரிகள் பிடித்துக்கொண்டார்கள். இது சரியாக இல்லை டபுள் மீனிங் இருப்பதாக கூறினார்கள். இதில் டபுள் மீனிங் எல்லாம் இல்லை டைரக் மீனிங் ஒரே மீனிங் தான் இருக்கிறது என்று நான் சொன்னேன் .இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டார்கள். இது ஒரு கணவன் மனைவி தங்களது அந்தரங்கமான விஷயத்தை தங்களது பெட் ரூமில் பேசிக்கொள்கிறார்கள். நீங்கள் U/A சான்றிதழ் கொடுங்கள் ஆனால் இதை வசனமாக வைக்கக் கூடாது என்று சொல்லக் கூடாது. நான் சின்ன வயதில் இருந்து என் வீட்டில் பார்த்து வளர்ந்த விஷயங்களை தான் என் படத்தில் வைக்க முடியும்." என பாக்யராஜ் இந்த நிகழ்வில் பேசியிருந்தார்.
