பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீரிடம் கேட்ட வருத்தத்திற்கு சமுத்திரக்கனி அறிக்கை மூலம் விளக்கம் கேட்டுள்ளார். 


’பருத்தி வீரன்’ படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை கடந்த சில வாரங்களாக பூதகரமாக வெடித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை திருடன் எனவும், வேலை தெரியாதவர், என் காசில் தொழிலை கற்றுக்கொண்டார் என தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கொங்காரா, பொன்வண்ணன், கவிஞர் சினேகன், இயக்குநர் கரு.பழனியப்பன், ’இயக்குநர் சிகரம்’ பாரதிராஜா என பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். 


தொடர்ந்து இந்த விவகாரம் வலுபெறும் நிலையில் இன்று காலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “ பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!” என தெரிவித்திருந்தார். 


இந்தநிலையில், இதுதொடர்பாக இயக்குநர் சமுத்திரகனி ”பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது...


நீங்க செய்ய வேண்டியது..


எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!


நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...!


அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு...


அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்... அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான், "அம்பானி பேமிலியாச்சே..!"


காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..! ” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


அமீர் மீது ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டு என்ன..? 


’பருத்தி வீரன்’ திரைப்படம் ரிலீசானபோது கலைஞர் கருணாநிதி முதல் அனைவரும் பாராட்டி கொண்டாடி தீர்த்தனர். இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்த பின் இயக்கநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என இருவரும் ஒருவர் மீது ஒருவர் கருத்தை கூறி இன்று அது பூதகரமாக வெடித்துள்ளது. கார்த்தி முதன் முதலில் கதாநாயகனாக நடித்த பருத்தி வீரன் படத்தை இயக்குநர் அமீர் இயக்க, இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார். இந்த நிலையில் பருத்திவீரன் படத்தால் தனக்கு ரூ.2 கோடி வரை கடன் ஏற்பட்டதாக அமீர் கூறியிருந்த நிலையில், இதுக்கு பதிலளித்த ஞானவேல்ராஜா, பருத்திவீரனின் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ரூ.2.76 கோடியில் பட்ஜெட் என சொல்லி விட்டு ரூ.4 கோடி வரை அமீர் செலவு செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.