ரஜினிகாந்த் மற்றும் திருமாவளவனை விமர்சித்து கருத்து தெரிவித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவுக்கு இயக்குநர் அமீர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தவெக சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதவ் அர்ஜூனா ரஜினி திமுக கொடுத்த மிரட்டலால் அரசியலில் பின்வாங்கினார் என தெரிவித்தார். அவரின் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பது பற்றியும் பேசினார்.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அது அறியாமையின் வெளிப்பாடு. ஒரு அரசியல் நாகரீகமில்லாத, அரியல் புரிதல் இல்லாத பேச்சு. அவருடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மகிழ்விப்பதற்காகவும், கட்சி தலைவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இன்னொருவரை குறைத்து மதிப்பிடக்கூடாது. ரஜினிகாந்தின் அரசியல் தெளிவு மற்றும் தைரியம் என்ன என்பது பற்றி இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆதவ் அர்ஜூனா சொல்லி தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என சொல்லும்போது ஆதவ் அர்ஜூனா எங்கே இருந்தார்?. எந்த ஜிம்மில் வேலை பார்த்தார், எந்த இடத்தில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். போகிற போக்கில் கருத்தை தெரிவிக்கக்கூடாது. நீங்கள் ஒரு கட்சி நடத்துகிறீர்கள், ஆட்சிக்கு வர வேண்டும் என நினைத்தால் உங்கள் தலைவரின் அருமை, பெருமைகளைப் பேச வேண்டும். இன்னொருவரை குறை சொல்ல உங்களுக்கு தகுதி கிடையாது. அதெல்லாம் சொல்லக்கூடாது. ரொம்ப தப்பு.
அதையும் தாண்டி விசிக தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா கொச்சைப்படுத்துகிறார். திருமாவளவனின் அர்ப்பணிப்பு என்ன என்பது அவருக்கு தெரியுமா?, நான் தனிப்பட்ட முறையில் பேச விரும்பவில்லை. ஆதவ் அர்ஜூனா தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பது அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. அவரின் நட்பு தவெகவுக்கு, விஜய்க்கும் நல்லதல்ல என ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.
திருமாவளவன் திருமணம் செய்யாமல் இந்த மண்ணில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நபர். இங்கிருந்து அண்டை மாநிலத்திற்கு திருமாவளவை அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவரின் பேச்சுகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொண்டுள்ள சூழலில் அவரைப் பற்றி விமர்சிக்கிறார். ஆதவ் அர்ஜூனா மாதிரி பணத்தை சேர்த்து விட்டு பதவி வாங்க வரவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுக்க வாக்கு எண்ணிக்கை முடிந்து விட்டது. தனி சின்னத்தில் நின்று அவருடைய தொகுதி தான் கடைசியாக முடிவு அறிவிக்கப்பட்டது. அவரைப் பற்றி பேச ஆதவ் அர்ஜூனாவுக்கு தகுதியில்லை” என தெரிவித்துள்ளார்.
