ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம். நடிகர் என்பதை விட சியான் விக்ரமின் மகன் என்றே துருவ் அறியப்படுகிறார்.காண்பவர்களுக்கு அப்பா - மகன் என்ற உறவை தாண்டி நெருங்கிய நண்பர்கள் போலவே தோன்றும், அந்த அளவிற்கு இருக்கும் இருவரின் பந்தம். துருவிற்கான தனி அடையாளத்தை உருவாக வேண்டும் என்பதுதான் அவரின் தந்தை விக்ரமின் நீண்ட நாள் ஆசை. அதற்காக கதை தேர்வுகளை பார்த்து பார்த்து செய்து வருகிறார் விக்ரம். முன்னதாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி , பசங்க உள்ளிட்ட படங்களில் துருவை நடிக்க வைக்க அப்பட இயக்குநர்கள் முயற்சித்தாக கூறப்படுகிறது.
ஆனால் அப்போது துருவ் டீன் ஏஜில் இருந்ததால் காத்திருந்தாராம் விக்ரம். இந்நிலையில்தான் தெலுங்கில் ஹிட் அடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கையில் எடுத்திருந்தார் இயக்குநர் பாலா. பாலாவிற்கும் விக்ரமிற்குமான நட்பு கோலிவுட் வட்டாரம் அறிந்ததே. பாலாவும் , விக்ரமும் இணைந்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததும் நாம் அறிந்ததே .
எனவே அர்ஜூன் ரெட்டி படத்தின் ரிமேக்கில் துருவை கதாநாயகனாக நடிக்க வைக்க அனுகியபோது, எந்த மறுப்பும் கூறாமல் பச்சை கொடி அசைத்தார் விக்ரம். ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிமேக் உரிமை வேறு இயக்குநருக்கு சென்றது. ஆதித்ய வர்மா என பெயரிடப்பட்ட படம் தெலுங்கு பதிப்பு அளவிற்கு வெற்றியடவில்லை என்றாலும், துருவின் நடிப்பை பலரும் பாராட்டவே செய்தனர்.