நடிப்பு அசுரன் என கொண்டாடப்படும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 43 வது படம் மாறன். இந்த படத்தை துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த இளம் இயக்குநர்  கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது .படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.  அஜித்தின் ஹைப் திரைப்படமான வலிமையும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என சில தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. ஆனால் படக்குழு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.




தற்போது தமிழக அரசு , திரையரங்குகளில் 100 சதவிகதம் வரையிலும் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தனுஷ் மாதிரியான பிஸினஸ் வேல்யூ உள்ள நடிகரின்  படத்தை ஓடிடியில் வெளியிடுவார்களா என்பது சந்தேகம்தான்.  முன்னதாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் , கொரோனா சூழல் காரணமாக வேறு வழியில்லாமல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போதே நடிகர் தனுஷ் மிகுந்த அப்செட்டில் இருந்தாராம். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் , தனுஷ் + கார்த்திக் நரேன் கூட்டணியின் படம் முதலில் திரையரங்கில் வெளியாகத்தான் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது எனவும் , அதன் பின்னர் ஒடிடியில் வெளியிடுவார்கள் என்கின்றனர் சில சினிமா விமர்சகர்கள். தனுஷ் ரசிகர்களும் அதே நம்பிக்கையில்தான் உள்ளனர்.






மாறன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாளவிகா மோகன்’ நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களை சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில்  தனுஷ் மாளவிகாவுடன் சேர்த்து  ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.