நடிகர் தனுஷூம் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் நேற்று தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர்களது இந்த முடிவு திரைவட்டாரத்தில் மட்டுமல்லாது, தனுஷ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மா, இந்த விவாகரத்து குறித்தும், திருமணம் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 


அவையாவன:-


”நட்சத்திரத்தின் விவாகரத்து, இளம் பருவத்தினருக்கு திருமணத்தில் இருக்கும் அபாயங்களை உணர்த்தியிருக்கிறது. திருமணத்தை போல, காதலை விரைவாக கொல்லக்கூடியது வேறொன்றுமில்லை. மகிழ்ச்சியின் ரகசியம் என்னவென்றால், தொடர்ந்து காதலித்துக் கொண்டே இருப்பதும், தேவை ஏற்படுகிற போது பிரிந்துவிடுவதும்தான். புத்திசாலிகள் காதலிக்கிறார்கள். முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். 


 






 


விவாகரத்துதான் சங்கீத் திருவிழா வைத்து கொண்டாடப்பட வேண்டும். காரணம், அப்போது விடுதலை கிடைக்கிறது. திருமணம் அமைதியாக நடக்க வேண்டும். காரணம் அங்கு ஒருவரையொருவரின் ஆபத்தான குணங்கள் பரிசோதிக்கப்படுகிறது. தொடர்ந்து சோகத்தையும், மகிழ்ச்சியின்மையையும் கொடுக்கும் திருமணம் என்பது முன்னோர்களால் சமுதாயத்தில் திணிக்கப்பட்ட தீயப்பழக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார். 






 


முன்னதாக, நடிகர் தனுஷும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.


தனுஷும், ஐஷ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். 




ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.


இவர்களின் இந்த முடிவு தனுஷ் மற்றும் ரஜினியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐஷ்வர்யாவுக்கு ஆன்மிகத்தில் எழுந்த நாட்டம்தான் விவாகரத்துக்கு காரணம், இல்லை இல்லை தனுஷ் மீது தொடர்ந்து கிசுகிசு வந்ததுதான் விவாகரத்துக்கு காரணம் என பலர் பல காரணங்களை கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களது பிரிவை ஆராய்ச்சி செய்து மேலும் அவர்களுக்கு மன உளைச்சல் கொடுக்காமல் அதனை மதிக்க வேண்டுமென்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.