தென் இந்தியா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டவர் நடிகர் அல்லு அர்ஜூன். இதனால் அடிக்கடி இவரது பெயர் சர்ச்சைகளில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் அல்லு அர்ஜூன் குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கூறிய தகவல் பெரியளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரபல பிராண்ட் மேனேஜராக இருந்து வருபவர் காவேரி பருவா. இவர் அண்மையில் ஸ்வீகிருதி டாக்ஸ் என்கிற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன் குறித்து பேசினார் . " ஹைதாபாதின் மிகப்பெரிய ஸ்டாரான அல்லு அர்ஜூனை அண்மை சந்தித்தேன். இந்த மாதிரி பிரபலங்கள் எப்போதும் படை சூழ வருவார்கள். இவர்களுக்கு மேலாளருக்கு மேலாளர் இருப்பார்கள். அல்லு அர்ஜூனை சந்திக்கும் முன் அவரிடம் இதை எல்லாம் செய்யக்கூடாது என்று சில விதிமுறைகளை கடைபிடிக்க சொல்வார்கள். அவரது கண்களை பார்க்கக் கூடாது. அவரிடம் கைகுலுக்கக் கூடாது என்று சொல்வார்கள். " என்று காவேரி இந்த பாட்காஸ்டில் பேசியிருந்தார்.
அல்லு அர்ஜூன் தரப்பில் மிரட்டல்?
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரியளவில் வைரலான நிலையில் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் இந்த வீடியோவில் பேசிய காவேரி மற்றும் வீடியோ வெளியிட்டவரையும் கடுமையாக தாக்கத் தொடங்கினர். மேலும் அந்த வீடியோவை நீக்கச் சொல்லி அல்லு அர்ஜூன் தரப்பில் இருந்து தங்களுக்கு மிரட்டல் வந்ததாகவும் ஸ்வீகிருதி தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் மறுப்பு
இந்த பிரச்சனை பெரிதான நிலையில் அல்லு அர்ஜூன் தரப்பினரிடம் இருந்து அவரைப் பற்றி பேசப்பட்ட தகவல் முற்றிலும் பொய்யானவை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. " அல்லு அர்ஜூன் பற்றி பேசப்பட்ட தகவல்கள் ஆதாரமற்றவை . அல்லு அர்ஜூன் எப்போதும் பெருந்தன்மையோடு தான் நடந்துகொண்டிருக்கிறார். இந்த பொய்யான தகவல்களை பரப்பியதற்காக நாங்கள் சட்ட ரீதியாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறோம். " என்று அல்லு அர்ஜூன் டீம் சார்பாக அறிக்கை வெளியாகியுள்ளது
