ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சீசன் 14-இன் இரண்டாம் பாதியை ஏமாற்றத்துடன் தொடங்கியது, அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். இந்தியாவில் நடைபெற்ற முதல் கட்டத்தில் முதல் 7 போட்டிகளில் 5 ல் வெற்றி பெற்று நல்ல ஃபார்மில் இருந்த ஆர்சிபி, துபாயில் தொடங்கிய முதல் போட்டியிலேயே சொதப்ப தொடங்கியது. ஆர்சிபியால் முதலில் பேட்டிங் செய்யும் போது 92 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனை ட்ரோல் செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் பழைய ட்வீட் ஒன்று வைரலானது.



ஐபிஎல் டி20 லீக்கின் ஆரம்ப ஆண்டுகளில் RCB-இன் ஆதரவாளராக தீபிகா படுகோன் எப்போதும் மைதானத்தில் காணப்படுவார். 2010-ஆம் ஆண்டில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின்போது, பெங்களூரு அணி ராஜஸ்தானை வெறும் 92 ரன்களுக்கு வீழ்த்தியது. அப்போது தீபிகா பதிவிட்டிருந்த ஒரு ட்வீட்டில், “92 !! இதெல்லாம் ஒரு ஸ்கோரா !? நிறைய தூரம் செல்ல வேண்டும் ஆர்சிபி! எப்பொழுதும் உங்களுடன்... ஒவ்வொரு நொடியும் நேரலையில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! " இப்படி எழுதி இருந்தார். பின்னர் கும்ப்ளே தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஜாக் காலிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று அதேபோல ஆர்சிபி பேட்டிங் பவுலிங் இரண்டிலும் மிகவும் மோசமாக இருந்தது. கே.கே.ஆரின் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபியை 92 ரங்களுக்குள் சுருட்டினர். கேகேஆரின் சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் முதல் விக்கெட்டுக்காக 82 ரன்களை விளாசி, மொத்த 93 ரன்களை மிகவும் எளிதாக சேஸ் செய்தனர். பிளே ஆஃப் செல்வதற்கான பாதயை வலுப்படுத்தும் விதமாக கொல்கத்தா வெறும் 10 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸின் தேவ்தத் படிக்கல் 22 ரன்களுடன் அவுட் ஆனதை அடுத்து யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் போன்ற ஸ்டார் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றமளித்தனர்.



போட்டியின் முடிவில், RCB கேப்டன் கோஹ்லி வெறும் 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது பெரிய ஸ்கோர் எடுக்கமுடியாமல் போவதற்கான காரணம் என்று கூறி வருத்தப்பட்டார். "பார்ட்னர்ஷிப் பில்ட் செய்து ரன்கள் அடிப்பது இந்த குறுகிய வடிவிலான ஆட்டங்களில் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இவ்வளவு சீக்கிரம் பனி பொழியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, நம்மால் அதை கணிக்க முடியாது. முதலில் பேட் செய்ய இது ஒரு நல்ல பிட்சாக தோன்றியது. நாங்கள் முதல் விக்கெட்டிற்கு 42 ரன்கள் எடுத்து இருந்தோம், பின்னர் அங்கிருந்து 20 ரன்களுக்குள் சுமார் ஐந்து விக்கெட்டுகளை இழந்தோம், அங்கிருந்து திரும்பி வருவது மிகவும் கடினம். இது ஒரு பாடம்தான், இதனால் வெற்றிக்கு நாம் இனி என்ன வேலை செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், ”என்று கோஹ்லி கூறினார். படுதோல்வி அடைந்தாலும் கோலி அணி இன்னும் முதல் நான்கு இடங்களுக்குள் சென்று பிளே ஆஃபுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் இன்னும் வலுவாகத்தான் உள்ளனர். 8 போட்டிகளுக்குப் பிறகு, RCB 5 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.