தனது முக பாவனைகளாலும் எதார்த்த நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இடையில் இவரின்  அரசியல் தலையீடு மற்றும் தேர்தல் பிரச்சாரம் காரணமாக தனக்கு இருந்த சினிமா வாய்ப்பினை தவறவிட்டார். பின்னர் கிடைத்த பட வாய்ப்புகளில் இயக்குநருக்கும் வடிவேலுக்குமான மோதல் போக்கு அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.  ஒரு காலத்தில் வடிவேலுவின் கால்ஷீட்டிற்காக தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களும் , முன்னணி இயக்குநர்களும் காத்துக்கிடந்தனர்.


தற்போது வெள்ளித்திரையில் வடிவேலுவின் நடமாட்டம் இல்லாவிட்டாலும் மீம்ஸ் வாயிலாக வடிவேலு இன்னும் ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டேதான் இருக்கிறார். இந்நிலையில் வடிவேலும் மீண்டும் எப்போது திரையில் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.  இந்நிலையில் ஒடிடி தளம் ஒன்று உருவாக்க உள்ள புதிய நிகழ்ச்சிகள் மூலமாக மீண்டும்  வடிவேலு ரசிகர்களை மகிழ்விக்க  வர இருப்பதாக செய்திகள் வெளியாகின. தெலுங்கில் பிரபலமாக உள்ள ஆஹா என்னும் ஒடிடி தளம் தமிழில் கால்பதிக்க உள்ளது. இதன் மூலமாக வடிவேலு மீண்டும் தான் விட்ட இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் வடிவேலுவின் அசத்தல் காமெடியில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் ‘ நேசமணி’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் சமீபத்தில் உலக அளவில் டிரெண்டானது. இந்த வைரலுக்கு பிறகு வடிவேலு மீண்டும் இயக்குநர்களின் கவனம் பெற்றார். தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய இயக்குநர் ராம் பாலா இயக்கத்தில், சிவி குமார் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாக இருப்பதாக தலவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் உருவான படத்தின் பெயர் டிடக்டிவ் நேசமணி என்றும் படம் தயார் நிலையில் உள்ளது, விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகும் எனவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வந்தது. மேலும் படத்தில் வடிவேலுவின் கெட்டப் குறித்த ஃபேன் மேட் போஸ்டரும் வெளியானது. 






இது குறித்து அறிந்த தயாரிப்பாளர் சிவி குமார்  இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில் “Fake news uhh இருந்தாலும் ஓரு நியாயம் வேண்டாமாப்பா … ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா …” என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கு கீழே கமெண்ட் செய்த வடிவேலு ரசிகர்கள் “ஃபேக் நியூஸ உண்மையான நியூஸா மாத்தினா ரொம்ப நல்லா இருக்கும் தயவுசெய்து முயற்சி செய்யுங்க அண்ணா” என கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் இந்த கூட்டணியில் உருவாகும்  படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.