விஜய் டிவியில் ஒளிப்பரப்பான  ‘குக் வித் கோமாளி’ படம் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ என்ன சொல்ல போகிறாய்’. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தை, அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இதில் பேசிய அஸ்வின் “ நான் கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கி விடுவேன். 40 கதைகளை கேட்டுத் தூங்கியிருக்கிறேன். என்ன சொல்ல போகிறாய் படத்தின் கதையைத்தான் நான் தூங்காமல் கேட்டேன்.” என்றார்.




இவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கடும் சர்ச்சையானது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்த அஸ்வின் நான் கலந்து கொண்ட பெரிய நிகழ்வு என்பதால் மிகவும் பதற்றமாக இருந்தேன். நான் என்ன பேச வேண்டும் என்பதை தயார் செய்து கொண்டும் செல்லவில்லை. நிகழ்வில் ரசிகர்கள் பொழிந்த அன்பில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எந்த இயக்குநரையும் அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் பேசியது இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என நினைக்க வில்லை. நான் குறிவைக்கப்பட்டதாக உணர்கிறேன்” என்றார்.


இப்படி ஒரு விளக்கத்தை அஸ்வின் அளித்த போதும், ஒரு பிரபல நடிகர் விழா மேடை ஒன்றில் அஸ்வினை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.  ‘கடைசி காதல் கதை’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பேசிய நடிகர் சாம்ஸ்  “ இயக்குநர் என்னிடம் இந்தப்படத்தில் உங்களுக்கு 2 நாள்தான் படப்பிடிப்பு என்றார். உடனே 2  நாள்தானா.. என்றேன். உடனே அவர் ஆனால் நிறைவாக இருக்கும் என்றார். உடனே கதை சொல்லட்டுமா என்று கேட்டார். “கதைக் கேட்டால் நான் தூங்கி விடுவேனே” என்றேன் என்று கூறியதாக அவர் தெரிவித்தார். இதனைக்கேட்ட அங்கிருந்தவர்கள் சிரித்தனர். 


தொடந்து பேசிய சாம்ஸ், “ இயக்குநர் கதையை 2 நிமிஷம் தான் சொன்னார். என்னால் தூங்க முடியவில்லை. சில சமயங்களில் மனோபாலா என்னிடம் பேசுவார். அப்படி ஒரு முறை பேசும் என்ன பண்ணுகிறாய் என்று கேட்டார். அப்போது இல்லை சார் ஒரு ரோல் அதில் நடிக்க வேண்டுமா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். உடனே அவர் ஏன்டா கதை கேட்டுலாமா நடிக்கிறாய் என்றார்.




அப்பதான் சார் உள்வாங்கி பொங்குவதற்கு வசதியாய் இருக்கும் என்று நான்  கூற, அவர் உள்வாங்கி பொங்குவதற்கு நீ என்ன கடலாடா என்று கலாய்த்ததோடு நீ நடிக்கிறதால படம் என்ன 2 நாள் எக்ஸ்ட்ராவா ஓடப்போகுதா என்றார். அன்றிலிருந்து கதை கேட்காமா கரன்சியை கேட்டோமா டேட்ட கொடுத்தமா என்றுதான் சென்று  கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.