தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குநர் குரு தனபால், ராஜ் சிற்பி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் அண்ணா முத்துவேல். சமீபத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது சினிமாவில் ராசி, ஜோதிடம், சகுனம் பார்த்து எப்படி பின்னடைவு அடைந்தார் என்பது பற்றி மனம் திறந்து பேசி இருந்தார்.



இணை இயக்குநராக பணிபுரிந்து ஒரு அனுபவம் பெற்று ஒரு படத்தை இயக்க வேண்டும் என வித்தியாசமான ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்தேன். பெற்ற பிள்ளையையே தகப்பன் தூக்கில் போடுவது போன்ற ஒரு ஸ்கிரிப்ட். இதை ஒரு நடிகர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். இந்த ஸ்கிரிப்டை என்னுடைய நண்பரான கேமரா மேன் ஒருவரிடம் சென்று சொன்ன போது அவரும் இந்த ஸ்கிரிப்ட் நன்றாக இருக்கிறது. எனக்கு சரத்குமார் சாரை நன்றாக தெரியும். அவர்கிட்ட நான் உன்னை அழைத்து செல்கிறேன் என சொல்லி இருந்தார்.


பெரும்பாடு பட்டு நடிகர் சரத்குமாரை ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று நானும் என்னுடைய நண்பரும் சென்று சந்தித்தோம். விஷயத்தை சொன்னதும் இன்று செவ்வாய்க்கிழமை அதனால் இன்னைக்கு கதை கேட்க வேண்டாம். ஃபாலோ அப்பில் இருங்க என சொல்லி அவருடைய பி ஏ நம்பரை கொடுத்தார். தொடர்ந்து ஆறு மாதங்கள் ஃபாலோ அப்பில் இருந்து கொண்டே இருந்தோம்.



ஒரு நாள் 'ஏய்' பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று சரத்குமாரை  சந்தித்தோம். ஒரு ஷாட் இருக்கு நான் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். என்ன விஷயம் என கேட்டார். இது மாதிரி ஒரு கதை என லைன் மட்டும் சொன்னதும் அவருக்கு ரொம்ப பிடித்து போனது. ஆனா முழு கதையை இன்னைக்கு கேட்க முடியாது. இன்னைக்கு சந்திராஷ்டமம் என மீண்டும் தள்ளி போட்டார்.

ஒரு நாள் பி ஏ மூலமா சரத்குமார் கும்பகோணம் ஷூட்டிங்ல இருக்கிறார் என தெரிய வந்தது. அதனால நானும் என்னுடைய நண்பரும் அங்கே போனோம். அங்க போன அவர் அங்க இல்ல உடையார்பாளையம் அப்படிங்கிற இடத்தில் ஷூட்டிங் போய் இருக்கிறதா தகவல் கிடைத்தது. எங்களை பார்த்து ஷாக்கான சரத்குமார் இங்க எப்படி வந்தீங்க? இங்க கதை கேட்க முடியாது. நான் கும்பகோணத்தில்தானே இருக்கேன் அங்கேயே நாளைக்கு வாங்கன்னு சொன்னார்.

அடுத்த நாள் கும்பகோணத்தில் போய் காத்திருந்தோம் ஆனா அவர் அந்த சமயத்தில் எம்.பியா இருந்ததால தீ விபத்து நடந்த இடத்துக்கு போய்விட்டார் என சொன்னார்கள். அவர் திரும்பும் வரை காத்திருந்தோம். அடுத்த நாள் வர சொல்லி சொன்னார். அப்போது கதையை ஒருவழியாக சொல்லி முடித்தேன். கதையை கேட்டு என் கையை பிடித்து குலுக்கி நாம நிச்சயம் செய்வோம் என்றார். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவே இல்லை. அதில் இருந்து அவருக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்பது புரிந்தது. அத்தோடு அந்த கதையும் அப்படியே கனவாகவே போனது என்றார் இணை இயக்குநர் அண்ணா முத்துவேல்.