நடிகைகள் பார்வதி மற்றும் நித்யா மேனன்  தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக சொன்ன பதிவுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. 


மலையாள உலகில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். வெப்பம் படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர் 180, ஓ காதல் கண்மணி, மெர்சல், 24, காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் என தன் பெயர் சொல்லும் கேரக்டரில் நடித்து வருகிறார். இதேபோல் பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி சென்னையில் ஒருநாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 






இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி கர்ப்பமாக இருப்பதாக பதிவு ஒன்றை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார். இதனைக் கண்ட ரசிகர்களும், பிரபலங்களும் குழப்பமடைந்தாலும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து நித்யாமேனன் வெளியிட்ட வீடியோவில் கேமராவுக்குப் பின்னால் இருந்த ஒருவரிடம், அது எப்படி நடந்தது என்று நீங்கள் கேட்பதற்கு அர்த்தம் என்ன? . நீங்கள் அங்கே தான் இருந்தீர்கள். அதனால் நீங்கள் என்னைப் போலவே இதற்கு பொறுப்பு தான். நான்கு முறை சோதனை செய்து பாசிட்டிவ் தான் வந்தது. எதிர்பாராததை எதிர்பார்க்கலாம், ஏனென்றால் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என சொன்னார். 


அதேசமயம் பார்வதி வெளியிட்ட வீடியோவில், ஆப்பிள் ஐபோனிடம் உள்ள சிரி மென்பொருளிடம் அவர் கர்ப்பக் கருவிகள் எவ்வளவு நம்பகமானவை என கேட்க, அதற்கு நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது என பதில் வந்தது. இதேபோல் தானே ஒரு குழந்தையை வளர்ப்பது கஷ்டமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு சிரி ஒரு குழந்தை 4 வயதிற்குள் படிக்கட்டுகளில் ஏற முடியும், ஆனால் சிலருக்கு முன்னதாகவே அதைச் செய்யப் பயிற்சி அளிக்க முடியும் என வித்தியாசமான பதிலை தந்தது. 






இதுபோன்ற கர்ப்பகால பதிவை நடிகைகள் பத்மபிரியா, அம்ருதா சுபாஷ், சயனோரா பிலிப் மற்றும் அர்ச்சனா பத்மினி ஆகியோரும் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் இவை அனைத்தும் அஞ்சலி மேனன் இயக்கும் வொண்டர் வுமன் படத்திற்காக தான் என தெரிய வந்துள்ளது. சோனி ஓடிடி தளத்தில் இது வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.