முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை தியேட்டரில் பார்க்க குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
ஜனநாயகன் படம்
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜனநாயகன்”. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்த, தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் விஜயின் கடைசிப்படமாக இது உருவாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, நாசர் என பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் படம் சிக்கலில் மாட்டிக் கொண்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. அதேசமயம் விஜய் தேர்தலில் போட்டியிட்டதால் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே இந்த படம் முழுவதுமாக இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் வேகமெடுத்தது.
சிக்கலாக வந்த “ஏ” சான்றிதழ்
இதனிடையே ஜனநாயகன் படத்தில் அதிகளவிலான ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக விஜய் படங்களை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவார்கள் என்ற நிலையில் யு/ஏ சான்றிதழ் தான் அதிகப்பட்சமாக தணிக்கையில் பெற்றிருக்கும். ஆனால் இப்படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
ஆனால் ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை 18 வயது நிரம்பிய பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றால் பெரியவர்களும் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும். எனினும் பெரும்பாலும் இது கடைபிடிக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் தியேட்டருக்கு குழந்தைகள் அனுமதியில்லை என்பது பின்பற்றப்படுகிறது. இதனை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது விதிமுறையாகும்.
Also Read: Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. திருவிழா போல கொண்டாடணும்.. அமைச்சர் ஆனந்த் உத்தரவு!
விறுவிறுப்பான டிக்கெட் முன்பதிவு
இப்படியான நிலையில் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏ சான்றிதழ் பெற்றிருப்பதால் குழந்தைகள் அனுமதி உண்டா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பல இடங்களில் முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்ட நிலையில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. விஜய் படம் என்பதால் இந்த விதிகள் பின்பற்றப்படாமல் இருக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விஜய் முன்னால் இருக்கும் சவால்
ஆனால் விஜய் நடிகராக இருந்திருந்தால் இது ஒரு பெரிய அளவில் பிரச்னையாக இருந்திருக்காது. இப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதால் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. விதிகளை பின்பற்ற வேண்டியது கடமை என்ற நிலையில் ஏற்கனவே படம் வெளியாகும் நாளில் அடக்கி வாசிக்க வேண்டும் என தவெகவினருக்கு விஜய் உத்தரவிட்டிருக்கிறார். ஒருவேளை விதிகளை மீறினால் அதனை எதிர்க்கட்சிகள் பிரச்னையாக்கும் முடிவிலும் இருப்பதால் ஜூலை 23ம் தேதி நிலவரம் கலவரமாகி விடும் என்பது உறுதியாகியுள்ளது.
