லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உத்தரவிட்டும் ஆவணங்களை சமர்பிக்காத நடிகர் விஷாலை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. 


கடன்தொகை:


நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் அவர் பட தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். இதற்கிடையில் லைகா நிறுவனம் விஷாலுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துக் கொண்டு  கடன் தொகை முழுமையாக  லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. 


சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில், “கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தில் வெளியாகும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவேன்” என உத்தரவாதம் வழங்கப்பட்டது. இதனிடையே விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "வீரமே வாகை சூடும்" படம் வெளியானது.  லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை தராமல் இந்த படத்தை ரிலீஸ் செய்யவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கேட்டும் லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.


விஷாலின் வங்கிக்கணக்குகள்:


இதனை விசாரித்த தனி நீதிபதி உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் ரூ.15 கோடியை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்ய, இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர். மேலும் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.


இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை தனி நீதிபதி எழுப்பினார். தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான விஷாலின் வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனை விவரங்களையும், சொத்து ஆவணங்களையும்  தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.


விஷாலுக்கு கண்டிப்பு:




ஆனால் இந்த வழக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது விஷால் தரப்பு ஆஜராகவில்லை. மேலும் நீதிபதி சமர்பிக்கக்கோரிய ஆவணங்களும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து செப்டம்பர் 22 ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஆவணங்களோடு விஷால் ஆஜராகுமாறு நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் இன்றும் விஷால் ஆஜரானார், அதேசமயம் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. 

 

இதனால் கடுப்பான நீதிபதி, ‘நீதிமன்றத்தை விட தன்னை பெரிய ஆள் என எண்ண வேண்டாம். இங்கு அனைவரும் சமம்’ என விஷாலை கண்டித்ததோடு, உங்கள் மேல் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். ஆனால் வங்கியில் இருந்து ஆவணங்கள் கிடைக்கப்பெற காலதாமதம் ஆகி விட்டதாகவும், 6 நாட்கள் அவகாசம் வேண்டும் எனவும் விஷால் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.