பி.வாசு இயக்கத்தில், 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'சந்திரமுகி' திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.


லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அங்கமான ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு அண்மையில் வெளியிட்டது. தொடர்ந்து சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா ரனாவத்தின் தோற்றம் சமீபத்தில் வெளியானது. சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குளில் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.









ஸ்வாகதாஞ்சலி பாடல்






இதற்கிடையில் சந்திரமுகி படத்தின் முதல் பாடலான ஸ்வாகதாஞ்சலி பாடலின் புரோமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கங்கனா. ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்து ஆஸ்கர் வென்ற கீரவாணியின் இசையில் முதல் முறையாக தோன்ற இருக்கிறார் கங்கனா.


ஈஷா யோகா மையத்தில் கங்கனா




இந்நிலையில்சந்திரமுகி படத்தின் வெற்றியை மிக ஆர்வமாக எதிர்பார்த்து வரும் கங்கனா ரனாவத் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக கோயம்புத்தூரில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார். சிவலிங்கத்தின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் தனது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


ஏற்கெனவே தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கங்கனா தொடர்ந்து தலைவி படத்திலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது சந்திரமுகி திரைப்படத்தைத் தொடர்ந்து தமிழில் அவர் தொடர்ச்சியான படங்கள் நடிப்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.