நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது மனைவி குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். 


தென்னிந்திய சினிமாவின் அழகு தேவதையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு சினிமா உலகிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே துக்கத்தில் ஆழ்த்தியது. அந்த குடும்பத்தின் மனநிலை அந்த சமயத்தில் சுக்குநூறாக உடைந்ததாக அவர் குடும்பத்தினர் அடிக்கடி தெரிவித்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மனைவியின் மறைவிற்கு பிறகு இருந்த மனநிலையை பகிர்ந்துள்ளார். 



 


நினைவுகளை பகிர்ந்த போனி கபூர் :


2018-ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உறவினர் கபில் ஷர்மாவின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றபோது நடிகை ஸ்ரீதேவி அகால மரணமடைந்தார்.  அந்த சமயத்தில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்த அவரின் கணவர் போனி கபூர் தனிமையில் வாடி வந்துள்ளார். அந்த தருணங்கள் குறித்து அவர் கூறுகையில் "ஸ்ரீதேவி இறந்த அந்த 3 - 4 நாட்களுக்கு மிகவும் பதற்றமாகவும், துயரத்திலும் இருந்ததில் சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் எழுந்தது. அந்த சமயத்தில் எனது மனைவி என்னிடம் கூறியது நினைவில் வந்தது. நீங்கள் என்னை உண்மையாக நேசிக்கிறீர்கள் என்றால் எனக்காக எதையும் செய்வேன் என்றால் சிகரெட் பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.  சிகரெட் பிடிக்க நினைக்கும் போது என்னுடைய காதலை பற்றி நினைத்து கொள்ளுங்கள் என்று கூறியது என் நினைவுக்கு வந்தது.


இதை சொல்லி தான் அவள் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் என்னை சிகரெட் பிடிப்பதை கைவிடவைத்தாள். ஆனால் அவளின் இறப்புக்கு பிறகு அவள் இல்லாத நேரத்தில் நான் மீண்டும் சிகரெட் பிடிப்பது எப்படி சரியாகும். அவளை நான் நேசிப்பது உண்மை என்றால் நான் அவளுக்கு பிடிக்காத அந்த செயலை செய்ய மாட்டேன். அதற்கு பிறகு சிகரெட்டை நான் தொடவே இல்லை. இனிமேல் தொடவும் மாட்டேன். எனக்கு அந்த ஆசையும் இல்லை" என தனது அன்பு மனைவியின் நினைவுகளை பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். 







போனி கபூர் - அஜித் காம்போ :


பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'துணிவு' திரைப்படத்தை தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து போனி கபூர் - அஜித் குமார் காம்போ மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தில் இணைந்துள்ளது.