மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் முதன்முறையாக நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தார். தற்போது அதே கூட்டணி மீண்டும் வலிமை படத்துக்காக இணைந்துள்ளது. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். மேலும் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






இந்தப் படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவை இணையத்தில் பெரும் வைரலாகின. இந்த நிலையில் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் அளித்த பேட்டியில், வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இன்னும் 10 நாட்களில் மொத்த படப்பிடிப்பு முடிவடைந்தவிடும். மீண்டும் எனது தயாரிப்பில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தையும் வினோத் இயக்குவார் என்று தெரிவித்தார். மூன்றாவது முறையாக போனி கபூர், அஜித் மற்றும் வினோத் கூட்டணி இணையவுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு ஜிபி முத்து முதல் இங்கிலாந்தில் மோயீன் அலி வரை கேட்டு போனி கபூரை டார்ச்சர் செய்து வந்த தல அஜித்தின் ரசிகர்களுக்கு சிங்கிள் டிராக், க்ளிம்ப்ஸ், புகைப்படங்கள் என்று சமீபகாலமாகதான் வெளியிட துவங்கியிருக்கிறார். அடுத்து இன்னொரு படத்தையும் அஜித்திற்கு போனி கபூரே தயாரிக்கிறார் எனும் செய்தி வந்ததில் இருந்து மீண்டும் ரசிகர்கள் அப்டேட்டுக்கு காத்திருக்க வேண்டிய பயம் இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது. 



இந்நிலையில், ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்த தல அஜித், சமீப காலமாகவே, ரிஃபில் ஷூட்டிங், மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றிற்காக வெளியில் வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபத்தில் 'வலிமை' பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்தார். சமீபத்தில் டெல்லி சென்ற அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது. இந்த பயணத்தின் போது, சாகச பெண்மணி ஒருவரை சந்தித்தார் அஜித். மாரல் யார்சலூவுடன் எடுத்து கொண்ட மற்ற சில புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் அஜித் பைக்கில் உலகம் முழுவதும் சுற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி பலரை ஆச்சரியப்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் அஜித் பைக்கிலேயே வாகா எல்லை வரை சென்று திரும்பியிருக்கிறார். அவர் அங்கு கையில் தேசிய கொடியோடும், ரணுவ வீரர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. இப்படி சமீப காலங்களில் பைக் ரைடுக்காக பல மக்களை நேரடியாக சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏறப்படுவதால் பல மக்களின் அன்பை நேரடியாக பெற்று வருகிறார். இது குறித்து ட்விட்டரில் அஜித் சக மக்களுடன் இருக்கும் படங்களை வெளியிட்டு, போனி கபூர் பதிவு ஒன்றை இட்டிருக்கிறார். அந்த பதிவில், "அவருக்கு பிடித்ததை செய்வதில் இருந்தும், அவர் கனவுகளை அடைவதில் இருந்தும் எதுவாலும் எவராலும் தடுக்க முடியாது, உலக அளவில் விரும்பப்படுபவர்" என்று பதிவிட்ட போஸ்ட் தற்போது வைரலாகி உள்ளது. அந்த போஸ்டை அஜித் ரசிகர்கள் பலர் லைக் செய்து கமென்ட் செய்து வருகின்றனர்.