துணிவு என்ற தலைப்பு அஜித்துக்கு முற்றிலுமாக பொருந்தும், அஜித்திடம் ஏதோ ஒன்று இருப்பதால் தான் அவர் படங்களுக்கு இப்படி பைத்தியக்காரத்தனமான ஓப்பனிங் கிடைக்கிறது என போனி கபூர் தெரிவித்துள்ளார்.


நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பின் இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார்- தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “துணிவு”. ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம், ஜான் கோக்கன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்,


பொங்கல் அன்று வெளியான இப்படம் தமிழ் நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அஜித்துக்கும் தனக்கும் இடையேயான உறவு குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:


மும்பையில் முதன்முறை அதிகாலை 3 மணி ஷோ


”அஜித்தின் ரசிகர்கள் காட்டும் அன்பு அசாத்தியமானது. அவரது நேர்மையான ரசிகர்கள் அஜித்துக்கு அளிக்கும் பெருமையின் பிரதிபலிப்பிலிருந்து நானும் அன்பைப் பெறுகிறேன். நான் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். அஜித்துடன் பணிபுரிந்தற்கு மகிழ்கிறேன், அஜித்துடன் மூன்று படங்கள் பணிபுரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


நான் ஒரு சில இடங்களுக்காக பயந்தேன். ஆனால் ரசிகர்கள் படத்தை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். அஜித்தின் ஸ்டைல் , மேனரிசம், நடிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்துக்கும் நன்றி.


மும்பையில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்துக்கு அதிகாலை 3 மணி ஷோ ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது என்றால் அது துணிவு தான்” என்றார்.


அஜித் படத்துக்கு இப்படி ஒரு ஓப்பனிங்!


ஊடக வெளிச்சத்தை விரும்பாத அஜித் எப்படி தொடர்ந்து ரசிகர்களால் இப்படி ஆராதிக்கப்படுகிறார் என்ற கேள்வி போனி கபூரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”அஜித்தின் நட்சத்திர மதிப்பு அவரது நடிப்பு, பண்பு, பெர்சனாலிட்டி அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாகியுள்ளது என நான் கூறுவேன்.


Image Source - Twitter


அஜித் யாரையும் பார்க்க மாட்டார், பேச மாட்டார், இசை வெளியீட்டுக்கு வர மாட்டார், பட ப்ரொமோஷன்களுக்கு வர மாட்டார், ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை அனைத்து நடிகர்களுக்கும் இது முக்கியம். ஆனால் இவற்றிலிருந்து அவர் விலகியே இருப்பார்.


ஆனாலும் அவரது படத்துக்கு ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான ஓப்பனிங் கிடைக்கிறது. அவரிடம் ஏதோ ஒன்று இருக்கறது, அவர் ஏதோ ஒன்றை சரியாக செய்கிறார்.


பயமறியாதவர் அஜித்!


நேர்கொண்ட பார்வை கதையை நான் தமிழில் எடுக்க ஆசைபட்டபோது அஜித்தும் அதே போன்ற கதையில் நடிக்க விரும்புவதாகக் கூறினார். தனது கரியரின் முக்கியமான நேரத்தில் நேர் கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு பெரும் துணிவு வேண்டும்.


துணிவு என்ற தலைப்பு அஜித்துக்கு முற்றிலுமாக பொருந்தும். அவர் பயம் அறியாத நபர்” என போனி கபூர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.