பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுகானா திரைத்துறையில் கால்பதிக்கவுள்ளார். அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.  ஷாருக்கான் கடந்த 1991 ஆம் ஆண்டு கௌரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அப்போது சின்னத்திரை நடிகராக இருந்தார் ஷாருக்கான். ஷாருக், கௌரி தம்பதிக்கு ஆர்யன் கான், சுஹானா, ஆப்ராம் என்கிற மூன்று குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி விவாகரத்து , அடுத்தடுத்த திருமணங்கள் என கடந்து போகும் பாலிவுட் வட்டாரத்தில் நீண்ட கால பந்தத்தில் இருப்பதால் அதிகம் கவனம் பெறும் குடும்பமாக ஷாருக்கான் குடும்பம் உள்ளது. தன் குடும்பம் குறித்தும் தன் குழந்தைகள் குறித்தும் அடிக்கடி பேசும் ஷாருக்கான் அவர்களது எதிர்காலம் குறித்த தன் பொறுப்பை குறிப்பிடுவார். 





தன்னுடைய மகள் சுஹானா ஒரு நடிகராக வர ஆசைப்படுவதாகவும், மகன் ஆர்யன் ஒரு இயக்குநராக வர விரும்புவதாகவும் தெரிவித்தார். அதில் ஒன்று தற்போது உண்மையாகவுள்ளது. ஷாருக்கானின் மகளான சுஹானா விரைவில் திரையில் தோன்றவுள்ளார். நெட்பிளிக்ஸுக்கு உருவாகவுள்ள ஒரு படைப்பில் சுஹானா நடிக்கவுள்ளார். ஆர்ச்சி காமிக்ஸ் நெட்பிளிக்ஸுக்கு சீரிஸாக எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சோயா அக்தர் இயக்கவுள்ளார். இதில்தான் சுஹானா நடிக்கவுள்ளாராம்.


இது குறித்து வெளியான தகவலின்படி, சர்வதேச காமிக் புத்தகமான ஆர்ச்சியை திரையில் ஒரு படைப்பாக உருவாக்க சோயா திட்டமிட்டு வருகிறார். இது நெட்பிளிக்ஸுக்காக உருவாகவுள்ளது. இது ஒரு இளைஞர்கள் பட்டாளம் கொண்ட கதைக்களம். இதற்கு பல இளம் நடிகர்கள் தேர்வு நடந்தும் வருகிறது. ஆனாலும் அதில் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஷாருக்கானின் மகள் நடிப்பது உறுதியாகியுள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுஹானா ஏற்கெனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார்.  இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளே தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஸ்கிரிப்ட் ஷாருக்கான் மற்றும் சுஹானாவிடம் தெரிவிக்கப்பட்டு ஒகே வாங்கிவிட்டால் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது. ஒரு நண்பர்கள் கூட்டத்தை சுற்றி நடக்கும் கதையே ஆர்ச்சி ஆகும்.




சமீபத்தில் வெளியான குறும்படம் மூலம் சுஹானா அதிகம் கவனம் பெற்றார். அவரது நடிப்புக்கு இணையத்தில் பலரும்பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய அடுத்த பரிமாணத்தை தொடங்கவுள்ளார் சுஹானா.


ஷாருக்கான் தற்போது பதான் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்ததாக  இயக்குநர் அட்லி, ஷாருக்கானை இயக்க இருக்கிறார்.  ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் இத்திரைப்படத்தை இந்தாண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்தாண்டின் தொடக்கத்திலோ வெளியிட படத்தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.  இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியானால், அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும். பாகுபலியைத் தொடர்ந்து பெரிய அளவில் தயாராகி வரும் இந்த திரைப்படம், இந்தியாவின் முக்கிய மொழிகளில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.