சமீபகாலமாக திரையுலகிலும் இந்தி எதிர்ப்புக்கான குரல் வலுத்து வருகிறது. நடிகர்கள், நடிகைகள் பொது நிகழ்ச்சிகள் பங்கேற்கும் பாேது அவர்களிடம் செய்தியாளர்கள் இந்தியில் பேச வற்புறுத்தும் போது தங்களது எதிர்ப்புக் குரலை பதிவு செய்து வருகின்றனர். 2 வருடங்களுக்கு முன்பு நடிகை டாப்ஸியும் இதேபான்ற பிரச்னைகளை சந்தித்தார். அதேபோன்று மெர்ஸி பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதியிடம் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு இருக்கும் போது எப்படி இந்தி படங்களில் நடிக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு நடிகர் விஜய் சேதுபதியும் தக்க பதிலடி கொடுத்தார். இதுபோன்ற கேள்விகள் முட்டாள் தனமானது என்றும் சுட்டிக் காட்டினார். அதேபோன்று இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா இந்தி தெரியாது போடா  என்ற டீசர்ட் அணிந்ததும் டிரெண்டிங் ஆனது. இந்தி மொழியால் பல திரை பிரபலங்கள் விமான நிலையத்தில் சந்தித்த அவமானங்களையும் பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல்  இந்தியில் பேச முடியாது என மறுத்த விவாகரம் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த வீடியோவும் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கஜோல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், மராத்தி மற்றும் ஆங்கிலத்திலும் பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இந்தியில் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த கஜோல், "நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு புரியும் என தக் லைஃப் ஆன பதிலை அளித்திருக்கிறார். இதனால், கஜோலுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தரப்பும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். "இந்தி வேண்டாம் என்று நினைப்பவர் இத்தனை வருடங்கள் எதற்காக இந்தி படங்களில் நடித்தார்" என்று எக்ஸ் தள பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதேபோல பேரும் புகழும் சம்பாதிக்கும் வரை இந்தி வேண்டும், இப்போது அது தேவைப்படவில்லையா? அது தேவையில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி பேசுபவர்களுக்கும் இந்தி பேசும் மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. நடிகை கஜோலும் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பதால் இந்தி மொழி குறித்த கஜோலின் இந்த கருத்து கவனிக்க வைத்துள்ளது.