பிரபல யூடியூபர் பிரியாணி மேன் லைவ் வீடியோவில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததைத் தொடர்ந்து இன்று அவரை சைபர் கிரைம் காவல் துறை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து பிரியாணி மேன் கைது செய்யப் பட்டதற்கான காரணத்தை சைபர் கிரைப் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 


பிரியாணி மேன் கைது ஏன்?


இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டதாவது ‘நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் (South Zone Cyber Crime PS), தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொடுத்த புகாரில், தான் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை youtube ல் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற youtube channel நடத்தி வரும் அபிசேஷக் ரபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார்.


மேற்படி புகாரின் அடிப்படையில், தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலையத்தில் BNS ACT, IT Act, Indecent representation of Women (Prohibition) Act and தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் youtubeல் வீடியோ பதிவேற்றம் செய்த எதிரி அபிஷேக் ரபி, வ/29 என்பவரை நேற்று (29.07.2024) செய்தனர்.


விசாரணை:


விசாரணைக்குப் பின்னர் எதிரி அபிஷேக் ரபி நேற்று (29.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தடுப்புச்சட்டம் (TNPHW ACT) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இர்ஃபான் பிரியாணி மேன் மோதல்


கடந்த ஒரு வார காலமாக பிரபல யூடியூபர் இர்ஃபான் மற்றும் பிரியாணி மேன் இடையே கருத்து மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வீடியோ வெளியிட்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டதைத் தொடர்து பிரியாணி மேனுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து பிரியாணி மேன் தனது சேனலில் லைவ் போட்டு அதில் தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.