பிக்பாஸ் நிகழ்ச்சி பொதுவாகவே பரபரப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக வார இறுதியில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் வரும்போது மிகவும் இந்த பரபரப்பு உச்சத்திற்கு செல்லும். போட்டியாளர்கள் போட்டியை தங்களுக்கு சாதகமாக விளையாடவும், போட்டியில் தொடர்ந்து நீடிக்கவும் முன்னேறவும் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரத்தில் கடந்த 7ஆம் தேதி ஒளிபரப்பான எப்பிசோடில் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் நிக்சன் மத்தியில் கடும் வாக்குவாதம் ஆனது.


வட சென்னை:


வாக்குவாதத்தில் நிக்சன் சில வார்த்தைகளை விட, அதற்கு  மற்றொரு போட்டியாளரான மணிச்சந்திரன் “ட்ரூ கலர் வெளியே வந்துடுச்சு பாத்தியா” என ரவீனாவிடம் கூறினார். அதேபோல் மற்றொரு போட்டியாளரான தினேஷ் - நிக்சனுடனான வாதத்தில் ‘தௌலத்’ என்ற வார்த்தையை ஒருவித உடல்மொழியுடனுன் வட்டாரவழக்கிலும்  வெளிப்படுத்தினார். இதற்கு நிக்சன் அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விஜய் டீவி வெளியிட்டுள்ள 4வது ப்ரோமோவில், தொகுப்பாளர் கமல்ஹாசன் இது தொடர்பாக மணிச்சந்திரன் மற்றும் தினேஷிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, ’மணி, ட்ரூ கலர்ஸ் கம்மிங் அவுட்’ எனக் கூறினீர்களே அதற்கு என்ன அர்த்தம்? எனவும் மற்றொரு போட்டியாளர் தினேஷிடம், ‘என்னாப்பா தௌலத்தா பேசுற’ எனக் கூறினீர்களே அதற்கு என்ன அர்த்தம்? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தினேஷிடம், ’நார்த் மெட்ராஸை (வட சென்னை) கூறுகின்றீர்களா? எனக் கேட்டார்.


நீங்க யாரு?


அதற்கு போட்டியாளர் தினேஷ் ஆமாம் என்பது போல் தலையை அசைக்க, உடனே தொகுப்பாளர் கமல், “ அப்படி பிராண்ட் குத்த நீங்கள் யாரு? உங்க ஸ்லாங் மாறியதற்கு காரணம் அதுதான். அவர் (மணி) சொன்ன் ட்ரூ கலர்ஸும் அதுதான். இன்னொரு முறை வன்முறை கூடினால் இந்த கார்டின் கலர் மாறும் ( ஸ்ட்ரைக் கார்டினை கமல் காட்டினார்)” என எச்சரித்தார். இதற்கு நிகழ்ச்சியை நேரில் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக கரகோஷம் எழுப்பியுள்ளனர். 


இதற்கு முன்னர், “ போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே கடுமையான வாக்கு வாதம் நடந்தது. இதில் நிக்சன்,  ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா? மூஞ்சியப்பாரு? நான் எல்லாம் கலாய்ச்சனா நீ எல்லாம் 3 நாளைக்கு உக்காந்து அழுகனும், போடி, சொருகிடுவேன்” என மிகவும் ஆவேசமாக கூறினார். இது போட்டியாளர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் புகைச்சலையும் கிளப்பியது.


இதற்கு முன்னர் வெளியான ப்ரோமோவில் இது தொடர்பாக பேசிய கமல், நிக்சன் நீங்கள் சொருகிடுவேன் எனக் கூறினீர்களே எங்கே சொருகுவீர்கள், இங்கேயா (கமல் தனது வயிற்றினைத் தொட்டு காட்டுகின்றார்), இல்லை இங்கேயா (கமல் தனது மார்பினைத் தொட்டு காட்டுகின்றார்), இல்லை இங்கேயா (கமல் தனது வலது கண்ணை வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் காட்சியைப் போல் காட்டுகின்றார்). இதற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் கைத்தட்டுகின்றனர். அர்ச்சனா மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளார். மேலும் கமல் நிக்சன் நீங்கள் சொருகுவதற்கு நான் ஒரு இடம் பார்த்து வைத்துள்ளேன் என “ஸ்ட்ரைக்” கார்டினைக் காட்டினார்.