பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக தனது யூடியூப் சேனல் மூலம் பல பிரபலங்கள் பற்றி மிகவும் வெளிப்படையாக பல தகவல்களை உடைத்து வருவதன் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அதே போல தயாரிப்பாளர் கே. ராஜனும் அவ்வப்போது ஏதாவது ஒரு மேடையில் கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவர்கள் இருவரும் கட்சிக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


 



மேடையில் ஏற்பட்ட வாக்குவாதம் :


அந்த நிகழ்வில் கே.ராஜன் - பயில்வான் ரங்கநாதன் சண்டை ஜிஎஸ்டியில் ஆரம்பித்து பின்னர் எங்கு எங்கோ போய் கடைசியில் வார்த்தைகள் தடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன்  பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கடுக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


 


அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கே. ராஜன் :


கே. ராஜன் பற்றி நீங்கள் பேசுகையில் நீ அட்ஜஸ்ட்மென்ட் பண்ணலயா என்பது பற்றி எல்லாம் பேசினீர்கள் என கேட்டதற்கு பயில்வான் பதிலளித்தார். அப்போது பேசுகையில், "அவர் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணியிருக்கேன். அதற்காக நான் அவர்களுக்கு காசு கொடுத்திருக்கேன் என அவரே யூடியூபில் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் யூ டியூபில் பார்த்துக்கொள்ளுங்கள். சமீபகாலமாக அவர் ஹோட்டலில் தான் தங்கி வருகிறார். அது குறித்து கேட்டால் என்னுடைய வீட்டில் மிகவும் சத்தமாக இருக்கிறது அதனால் நான் தனியாக ஹோட்டலில் இருக்கிறேன் என கூறுகிறார். இது எல்லாம் நம்புவது மாதிரியா இருக்கு” என்றார் பயில்வான். 


 



வம்பு இழுக்க நான் வரவில்லை :


சமீபகாலமாக நீங்கள், கே. ராஜன் போன்றவர்கள் எல்லோரும் இசை வெளியீட்டு விழாக்கள் போன்ற மேடைகளில் சலசலப்பை ஏற்படுத்துவது போல பேசி வருகிறீர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு பயில்வான் பதிலளிக்கையில் " நான் அவரிடம் வம்பு இழுக்க வேண்டும் என நினைக்கவில்லை. என்னை பற்றி அவதூறாக பேசுகிறாயே; இப்போது நான் நேரில் வந்து இருக்கிறேன் வந்து நேரடியாக பேசு என்று தான் கேட்டேனே தவிர பிரச்சினை செய்ய வரவில்லை. இதே போல இருவரும் ஒரு விழாவில் கலந்து கொண்டோம். நான் பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் வெளிநடப்பு செய்தார். நீ அப்படி இல்லை என்றால் ஏன் அங்கு இருந்து செல்ல வேண்டும்? என கேட்கிறார்.


நான் பொய் சொல்லவில்லை :


பணத்துக்காக பிழைப்புக்காக தான் நீங்கள் இப்படி பொய் பேசி யூடியூப் நடத்தி வருகிறீர்கள் என கூறுகிறாரே அதற்கு உங்கள் பதில் என்ன என கேட்டபோது பயில்வான் பதிலளிக்கையில் "யாரு தான் பிழைப்பு நடத்தவில்லை. என்ன பொய் பேசினேன் என அதையே திருப்பி திருப்பி சொல்றீங்க. நான் தான் பொய் சொல்லவில்லை. உண்மையை தான் சொல்கிறேன். அப்படி பொய் பேசுவதாக இருந்தால் என்னை அழைப்பீர்களா? என்னுடைய தொழிலில் நான் கண்ணையும் காதையும் மூடி கொண்டு நடிப்பேன். ஆனால் தினசரி யூடியூபில், வெப் தொடரில் என்னென்ன வருகிறது என்பதை பார்ப்பது தான் எனக்கு வேலை. ஏன் என்றால் நான் உண்மையான பத்திரிகைக்காரன். ஆனால் அவர் ஒரு உண்மையான தயாரிப்பாளர் கிடையாது" என கூறினார்.