தென் இந்திய சினிமாக்களை தொடர்ந்து பாராட்டி வருபவர் இயக்குநர் அனுராக் கஷ்யப். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், தேவ் டி, அக்லி, ஆகிய படங்களின் மூலமாக உலகம் முழுவதும் அறியப்படுபவர் அனுராக். அதே நேரத்தில் ஒரு பாலிவுட் இயக்குநராக இருந்துகொண்டு பாலிவுட் சினிமாக்களை தொடர்ந்து விமர்சித்து வருபவரும் அனுராக். இந்திய சினிமா இயக்குநர்கள் அனைவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தென் இந்திய சினிமா தனக்கு ஏன் பிடித்தமானதாக இருக்கிறது என்பதை விளக்குகிறார் அனுராக் கஷ்யப்


 நல்ல ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள்..


தென் இந்திய சினிமா குறித்து பேசிய அனுராக் கஷ்யப் “ கேரளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் கலாச்சார ரீதியாக முன்னகர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல ரசனை இருக்கிறது. அவர்களில் இருந்து இயக்குநராக உருவாகும் ஒருவர் இந்த மண்ணுக்கான கதைகளை இயக்குகிறார்கள்.


தங்கலான் படத்தை புகழ்ந்த அனுராக் கஷ்யப்


நான் அண்மையில்தான்  இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தின் டீஸரை பார்த்தேன். அந்த மாதிரியான  காட்சிகளை நான் இந்தி திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்தி திரைப்படங்கள் ஒரு காலத்தில் தங்களது நிலத்திற்கான கதைகளை கொண்டிருந்தன ஆனால் அதற்கு பின் அவை ஹாலிவுட் நோக்கி  நகர்ந்துவிட்டன. நான் இந்திப் படங்களைக்கூட பார்க்காமல் தவிர்த்துவிடுவேன். ஆனால்  நான் தங்கலான் மாதிரியான படங்களை பார்ப்பதற்கு தவறுவததில்லை.


வெற்றிமாறனின் விடுதலை  எனக்கு ரொம்ப பிடித்த படம்


மேலும் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் தனக்கு ரொம்பப் பிடித்திருந்ததாகவும், வெற்றிமாறன் இயக்கிய படங்களில் விடுதலை அவரது சிறந்த படமென்றும் கூறினார் அனுராக். படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்காக தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார் அனுராக் கஷ்யப்.


எல்.சி.யு வில் செத்துப்போக எனக்கு ஆசை


அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு பட வரிசையில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதாகவும் அதுவும் குறிப்பாக ஒரு முக்கிய வில்லனாக இருந்து கடைசியில் கொடூரமான மரணமடைய வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.


தற்போது குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார் அனுராக் . இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்று தகவலும் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியுடன் நடிக்கும் அனுபவம் குறித்து பேசும்போது இப்படி கூறியிருக்கிறார் அனுராக் “ விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும்போது அவரது கண்களைப் பார்த்தாலே எதிரில் இருக்கும் நமக்கும் நடிக்க வந்துவிடும் “


விரைவில் இந்தப் படம் குறித்தான தகவல்கள் வெளியாகும் என தெரிவித்துள்ளார் அனுராக் கஷ்யப்.