குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து பின்னர் 2009ம் ஆண்டு ஹீரோயினாக மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அஞ்சலி நாயர். பல திரைப்படங்களில் நடித்து தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி நாயர் 'நெல்லு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகம் கொடுத்தார். தற்போது அவர் முன் வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



அண்ணாத்த படத்தில் அம்மா ரோல் :


கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நெல்லு'. எம். சிவ ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகை அஞ்சலி நாயர் 'பாக்யாஞ்சலி' என்ற பெயரில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான வரவேற்பு கிடைக்காத இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படத்தில் சிறு வயது ரஜினி கதாபாத்திரத்தின் அம்மாவாக நடித்திருந்தார் அஞ்சலி நாயர். 


தமிழில் வாய்ப்புகள் இல்லை :


அஞ்சலி நாயர் ஒரு யூடியூப் சேனல் மூலம் தனது சினிமா அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். "நான் கேரளாவை பூர்வீகமாக கொண்டு இருந்தாலும் தமிழ் சரளமாக பேசுவேன். தமிழ் படங்களில் நடிக்க மிகவும் விருப்பம் ஆனால் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை" என்றார். இதை தொடர்ந்து அவர் பல தகவல்களை பகிர்கையில் ஒரு அதிர்ச்சியான தகவலையும் பகிர்ந்தார். 



தொடர்ந்த டார்ச்சர் :


"நான் நடித்த முதல் தமிழ் படத்தில் வில்லனாக நடித்தவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். அப்படத்தில் அவர் வில்லன் மட்டுமின்றி இணை தயாரிப்பாளராகும் இருந்தார். என்னை மிகவும் மோசமாக டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். ஏராளமான கண்டிஷன் போட்டார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் கூட என்னை வெளியில் செல்ல அனுமதிக்கமாட்டார். எனக்கு ப்ரொபோஸ் செய்து எங்கு சென்றாலும் பின் தொடர்ந்தார். ஒருமுறை என்னை ரயிலில் இருந்து தள்ளி விடவும் முயற்சித்துள்ளார்" என்றார்


அஞ்சலி முன்வைத்த குற்றச்சாட்டு :


ஒரு முறை என்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்து கொண்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்தால்தான் பேக்கை திருப்பி கொடுக்க முடியும் என மிரட்டினார். அந்த சமயத்தில் காவல் துறையின் உதவியை நாடினேன். அவரின் டார்ச்சர் தாங்காமல் நான் கேரளாவுக்கே சென்றுவிட்டேன். எனது குடும்பத்தில் பல கலைஞர்கள் இருப்பதால் அவர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அஞ்சலி நாயர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.