தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து, மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் அவ்வபோது வெற்றிபெறுவது வழக்கம், இவ்வருடமும் அதைபோல பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் 'அலங்கு' திரைப்படமும் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்குகிறார்.


அலங்கு திரைப்படம் 


தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்குனர் சக்திவேல் உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும், இத்திரைப்படம் முற்றிலும் ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறது.


இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார். இவர், “உறுமீன்”, “பயணிகள் கவனிக்கவும்” என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர். இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதை” என்றார்.


தயாரிப்பாளர் சங்கமித்ரா சவுமியா அன்புமணி


படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் மேலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படி படம் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தை D.சபரிஷ் ,சங்கமித்ரா சவுமியா அன்புமணி இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த “செல்ஃபி” திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது. திரைப்படத்தின் மூலம் சங்கமித்ரா சௌமியா அன்புமணி, தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார் .


அரசியல் To சினிமா


ஏற்கனவே சங்கமித்ரா சவுமியா அன்புமணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தனது தாய் சௌமியாவிற்கு, தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போது கவனத்தை பெற்று இருந்தார். வித்தியாசமான முறையில் நாடாளுமன்ற தேர்தலில் சங்கமித்ரா பிரச்சாரம் செய்திருந்தது, கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில் அலங்கு திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் மற்றும் சினிமா இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாகவே இருந்து வருகிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து பலர் சாதிித்து இருக்கிறார்கள், பலர் சறுக்கியும் இருக்கிறார்கள். அரசியலில் இருந்து சினிமாவிற்கு சென்றிருககும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சௌமியா அன்புமணி சினிமாவில் சாதிப்பாரா  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.