பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவரது நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 9-ந் தேதி வெளியாக உள்ளது.
சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு படத்தின் நாயகியாலே பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நாயகியாக ரன்பீர் கபூர் மனைவி அலியாபட் நடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அலியாபட் சமீபத்தில் அளித்த பேட்டிதான் பிரம்மாஸ்திரம் படத்திற்கு தற்போது  எமனாக மாறியுள்ளது. 




அதாவது, அவர் அந்த பேட்டியில் “ என்னைப் பிடிக்காவிட்டால் என்னைப் பார்க்காதீர்கள்” என்று கூறுகிறார். அவரது அந்த பேட்டியின் வீடியோவை இணையவாசிகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், இந்த வீடியோவுடன் பாய்காட் பிரம்மாஸ்திரா என்ற ஹேஷ்டேக்கையும் வைரலாக்கி வருகின்றனர். இதனால், படக்குழு மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 










பாய்காட் பிரம்மாஸ்திரா, பாய்காட் பாலிவுட் என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் அலியா பட்டை வறுத்தெடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சிலர் 500 கோடியில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா ப்ளாக்பஸ்டர் அல்ல,. பிளாப்பஸ்டர் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளனர். படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில, நாட்களே உள்ள நிலையில், தற்போது டுவிட்டரில் பாய்காட் பிரம்மாஸ்திரா ட்ரெண்டாகி வருவதால் படக்குழு என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். 










ஏனென்றால், பாலிவுட்டின் உச்சநட்சத்திரமான அமீர்கான் நடிப்பில் வெளியான லால்சிங் சத்தா திரைப்படத்தை, அமீர்கானின் கடந்த கால பேச்சை சுட்டிக்காட்டி பாய்காட் லால்சிங் சத்தா என்று ட்ரெண்டாக்கியதால், படம் படுதோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக படக்குழு அச்சமடைந்துள்ளது. மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நாகர்ஜூனா, மௌனி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாஸ்திரா படம் பிரம்மாண்ட வெற்றி பெறுமா..? அல்லது லால்சிங் சத்தா படத்தின் நிலைதானா? என்பது ரசிகர்கள் கையில்தான் உள்ளது.