தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மங்காத்தா.
நாளை ரீ ரிலீஸ் ஆகும் மங்காத்தா:
அஜித்குமார் தனது திரை வாழ்வில் அதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் அந்த படத்தில் நடித்திருப்பார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை 23ம் தேதி ரீ ரிலீஸ் செய்வதாக ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதன்படி, நாளை மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அஜித்குமார் நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு குட் பேட் அக்லி படம் வெளியாகியது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த படம் வசூலை குவித்தது. இந்த படத்திற்கு பிறகு அஜித் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
ரசிகர்கள் கொண்டாட்டம்:
இதனால், மங்காத்தா படத்தின் ரீ ரிலீசை கொண்டாட அஜித் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் மங்காத்தா படம் வெளியாகும் திரையரங்குகளின் முன்பு அஜித்தின் புதிய படம் வெளியாகும்போது இருக்கும் அதே எதிர்பார்ப்புகளும், கொண்டாட்டங்களும் காணப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் ஏராளமான திரையரங்குகளில் மங்காத்தா படம் ரிலீஸ் ஆகிறது.
கில்லி வசூல் முறியடிப்பா?
விஜய்யின் கில்லி படத்தின் ரீ ரிலீஸ் முதல் நாள் வசூலை தற்போதே புக்கிங்கில் மங்காத்தா படம் நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் அஜித்குமார், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, வைபவ், அரவிந்த், ஜெயபிரகாஷ், பிரேம்ஜி, மகத், அஸ்வின் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பார்கள்.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார். துரை தயாநிதியின் கிளவுட்நைன் இதைத் தயாரிக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் இதை விநியோகம் செய்ததது. அப்போது, படத் தயாரிப்பில் தொடர் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அளித்தது.
இந்த படத்தில் அஜித், அர்ஜுன் இருவரும் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார்கள். வழக்கமாக, கதாநாயகனாக நடித்து வந்த அஜித்குமார் இந்த படத்தில் ஆன்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கிரிக்கெட் சூதாட்ட பண கொள்ளையை மையமாக கொண்ட இந்த படத்தில் அஜித்தின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பிறகே கதாநாயகர்கள் பலரும் நெகட்டிவ் கதாபாத்திரங்களை விரும்ப ஆரம்பித்தனர்.