தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவர் கடந்த 2011ம் ஆண்டு நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா. இந்த படம் அந்தாண்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
மங்காத்தா ரீ ரிலீஸ்:
இந்த படத்தை கடந்த ஜனவரி 23ம் தேதி மீண்டும் ரீ ரிலீஸ் செய்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். வித்தியாசமான திரைக்கதை, அஜித்குமாரின் வில்லத்தனமான நடிப்பால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வசூல் எவ்வளவு?
திரையரங்கில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக இந்த படம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆகிய நிலையில், முதல் 3 நாட்களில் மட்டும் இந்தியாவில் ரூபாய் 10 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரெளபதி 2, ஹாட் ஸ்பாட் 2 ஆகிய புதிய படங்கள் வெளியாகிய நிலையிலும், பொங்கல் ரிலீசான பராசக்தி, வா வாத்தியாரே மற்றும் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்களுக்கு மத்தியில் மங்காத்தா ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்கில் கொண்டாட்டம்:
கிரிக்கெட் சூதாட்ட பணத்தை கொள்ளையடிப்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை அப்போது திரையரங்கில் சென்று காண முடியாத 2கே கிட்ஸ் தற்போது திரையரங்கில் சென்று கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் பிரபலமான காசி, ரோகிணி போன்ற பல திரையரங்குகளில் ரசிகர்கள் ஆடிப்பாடி படத்தை கொண்டாடும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. வெங்கட்பிரபு இயக்கிய இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார்.
இவர்களுடன் அஸ்வின், மகத், பிரேம்ஜி, வைபவ், அரவிந்த், ஆண்ட்ரியா, அஞ்சலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பார்கள். இவர்களுடன் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.
ஓஜி அஜித் ரசிகர்கள்:
அஜித்குமாரின் வித்தியாசமான நடிப்பும், படத்தின் எதிர்பாராத கிளைமேக்ஸ் ட்விஸ்டே படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த படத்தால் அஜித்குமாரின் விண்டேஜ், ஓஜி ரசிகர்கள் மீண்டும் திரையரங்கிற்கு திரும்பியிருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது.
பல திரையரங்கின் உள்ளே பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பல திரையரங்குகளில் காவல்துறையினர் உள்ளே சென்று ரசிகர்களை கட்டுப்படுத்தினர். கோவையில் ஒரு திரையரங்குகளில் திரைக்கும், ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையே பேரிகார்ட் தடுப்பு போட்டப்பட்டு ரசிகர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.