நடிகர் ரஜினிகாந்தின் புதிய போட்டோ ஒன்றை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 




தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” படத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோரும் நடித்து வருவதால் படம் குறித்து எதிர்பார்ப்பு இப்போதே எகிற தொடங்கியுள்ளது. 






இதனிடையே சமீபத்தில் ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யாவுக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது. தாத்தாவான மகிழ்ச்சியில் ரஜினி இருக்கும் புகைப்படத்தை சௌந்தர்யா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய ரஜினி, பொன்னியின் செல்வன் நாவல் தன்னை கவர்ந்த விதத்தையும், மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க சிரமப்பட்டதையும், வாய்ப்பு கேட்டும் பொன்னியின் செல்வனில் மணிரத்னம் வாய்ப்பு கொடுக்க மறுத்ததையும் கலகலப்பாக பேசி அனைவரையும் கவர்ந்தார். 


நடுவில் தன்னுடன் மேடையில் இருந்த கமலை கால் வலிக்கும் உட்கார சொல்லி அன்போடு சொன்னது உட்பட ரஜினி 70 வயதிலும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து தான் ஏன் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுகிறேன் என்பதை சொல்லாமல் நிகழ்த்திக் காட்டினார். 


இந்நிலையில் ரஜினி கேசுவலாக உட்கார்ந்து ஸ்மார்ட்போனை உபயோகித்துக் கொண்டிருக்கும் போட்டோவை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா  தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “விஜயதசமி வாழ்த்துக்களுடன்... தேவையான, தவறு எதுவும் இல்லாத, குறையற்ற தந்தை அன்பு” என தெரிவித்துள்ளார். மேலும் ஃபில்டர் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்ட இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.