தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட புகைப்படம் கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 


இந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதியினராக உள்ள அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியினரின் மகளான ஆராத்யாபச்சன் நேற்றைக்கு முந்தைய நாள் தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுக்கு லிப் கிஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் “மை லவ்... மை லைஃப்... ஐ லவ் யூ மை ஆராத்யா’ என தெரிவித்திருந்தார். 


இதனைக் கண்ட இணையவாசிகளில் பலர் ஆராத்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், சிலர் ஐஸ்வர்யா ராயின் செய்கையை கடுமையாக விமர்சித்தனர். உதட்டு முத்தம் கொடுப்பது பொருத்தமற்றது என்றும், இந்திய கலாச்சாரம் இல்லாத இது  வெட்கக்கேடானது எனவும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் மகள் மீது உங்களுக்கு உண்மையான அன்பு உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் ஒரு பிரபலம் என்பதால் இதனை முன்னெடுக்காதீர்கள் எனவும் கருத்துகள் வர தொடங்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 






இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐஸ்வர்யாராய்க்கு ஆதரவாகவும் கருத்துகள் வரத் தொடங்கியது. அதன்படி தன் மகளின் உதட்டில் முத்தமிட்டால் லெஸ்பியன் ஜோடி என சொல்வார்கள் என்பவர்கள் அதைச் சொல்வதற்கு முன் வெட்கப்பட வேண்டும் என்றும், இந்த முத்தம் அன்பு மற்றும் பாசத்தின் வெளிப்பாடு. எனவே உங்கள் புத்திசாலித்தனமான கருத்துக்களை வழங்குவதை நிறுத்திவிட்டு அன்பைப் பரப்புங்கள் எனவும் கமெண்டுகள் பதிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


முன்னதாக கடந்தாண்டு மாலத்தீவில் அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியினர் ஆராத்யாவின் 10 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடினர். அதன் புகைப்படங்களை அபிஷேக்பச்சன் வெளியிட்ட நிலையில் சிலர் ஆராத்யாவையும், அபிஷேக் பச்சன் குடும்பத்தினரையும் கேலி செய்து பதிவுகளை வெளியிட்டனர். இதனை அபிஷேக் பச்சன் கடுமையாக கண்டித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், நான் பிரபலம் என்பதால் விமர்சனம் எழுவதை தவிர்க்க முடியாது. அதற்காக ஆராத்யாவை பேசுவதெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. அவளை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேராக பேசுங்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.