தன்னுடைய பெர்சனல் மற்றும் தொழில்ரீதியான முன்னெடுப்புகளின் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து முதன்மைச் செய்திகளின் இடம்பெறக்கூடிய நடிகைகளுள் ஒருவர் ஐஷ்வர்யா ராய் பச்சன். சமீபத்தின் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் 75வது கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றதற்காகவும், அதில் அவர் அணிந்திருந்த உடையின் காரணமாகவும் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளார் ஐஷ்வர்யா ராய் பச்சன். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பெரிய திரையில், இயக்குநர் மணிரத்னம் உருவாக்கி வரும் `பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஷ்வர்யா ராய் பச்சன் நடித்திருப்பதும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் நடிக்கும் கதாபாத்திரத்தின் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதோடு, ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. 


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், `பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்து பேசியுள்ள நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன், அந்தத் திரைப்படத்தை மணிரத்னத்தின் கனவுத் திரைப்படம் எனக் கூறியுள்ளார். `அவர் என்னிடம் வந்து, இந்தக் கதையைக் கூறிய போது, `என் தொடக்க காலத்திலேயே நான் உருவாக்க விரும்பிய படைப்பு இது’ எனக் கூறினார். அவரது கனவில் என்னையும் ஒரு பகுதியாக இருக்கக் கூறியதை எண்ணி நான் பெரும் பாக்கியம் கொண்டவளாக உணர்கிறேன். இந்தத் திட்டத்தின் தொடக்கத்திலேயே அதில் ஒரு பங்காக இருப்பதே நிறைவானது. மேலும், அதன் அனுபவம் மிகச் சிறப்பாக அமைந்தது.. அவரைப் போல திறமையானவரோடு பணியாற்றுவதும், ஒவ்வொரு முறை அவர் கொண்டு வரும் திறமைகளும் சிறப்பானவை’ எனக் கூறியுள்ளார். 



மேலும் தனது குருநாதர் மணிரத்னத்துடன் இணைந்திருப்பது குறித்து பேசியுள்ள நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன், `தொடக்க காலங்களில், புதிதாக சினிமாவுக்குள் நுழைந்த போது, மணிரத்னத்துடன் பணியாற்றுவது என்பது என்னுள் இருந்த மாணவிக்கு மிகப் பெரிய பாக்கியம். தொடக்க திரைப்படத்திலேயே இதனை விட நல்ல வாய்ப்பை என்னால் பெற்றிருக்க முடியாது. மேலும், மணிரத்னம் போன்ற மிகத் திறமையான இயக்குநருடன் கடந்த ஆண்டுகளில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியதையும், வளரும் கலைஞராக பல்வேறு புதிய அனுபவங்களைப் பெற்றதும் என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். மணிரத்னத்துடன் பல முறை பணியாற்றியிருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 






விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஷோபிதா தூலிபாலா, ஐஷ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரவு, அஷ்வின் காகுமானு ஆகிய பலரும் நடித்துள்ள `பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.