தனது காதல் உறவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேசியதற்கு நடிகை அதிதி ஷங்கர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மில்லியனர் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி இயக்கியுள்ள படம் ஒன்ஸ்மோர். இப்படத்தில் ஹீரோவாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ஒன்ஸ் மோர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட அதிதி, இதுதொடர்பாக பேசியுள்ளார்.
அதாவது, நான் அனுபமாவின் நேர்காணலைப் பார்த்தேன். மிகவும் தனிப்பட்ட ஒரு அனுபவத்தைப் பற்றி நேர்மையாகப் பேசியதற்காக எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனுபமாவின் கருத்துக்கள் இணையத்தில் பல்வேறு விதமான எதிர்வினைகளைத் தூண்டியிருந்தாலும், அந்தப் பேட்டியை யாரையும் குறிவைக்கும் அல்லது இழிவுபடுத்தும் ஒரு முயற்சியாகத் தான் பார்க்கவில்லை. அவர் பேசியதில் நேர்மை இருந்தது. இதனால் பலருக்கும் சிக்கலான உறவுகள் குறித்த புரிதலும், மற்றவர்கள் புரிந்துகொள்ளச் சிரமப்படும் விஷயங்களை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பும் அமையும் என நான் நினைக்கிறேன்.
சில சமயங்களில் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை உடனடியாக அடையாளம் காண முடியாத ஆரோக்கியமற்ற சூழலில் சிலர் மாட்டிக் கொள்கிறார்கள். அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அனுபவம் பலரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். என நான் நம்புகிறேன் என அதிதி ஷங்கர் கூறியுள்ளார்.
அனுபமா பேசியது என்ன?
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். முன்னதாக நடிகர் த்ருவ் விக்ரமுடன் அவர் காதலில் இருப்பதாக சொல்லப்பட்டது. வெளியே சொல்லாமல் இருவரும் மௌனம் காத்தனர். இப்படியான நிலையில் கடந்த மாதம் அனுபமா சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் வெளியேறுவதாக அறிவித்தார். த்ருவ் உடனான காதல் முடிவுக்கு வந்ததால் இந்த முடிவு என பலரும் கணிந்திருந்தனர்.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனுபமா, “தனது முன்னாள் காதலருடன் இருந்த நச்சுத்தன்மையான உறவு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல், உடல் நல பாதிப்புகள் என அடுக்கடுக்கான விஷயங்களை வெளிப்படுத்தி அதிர்ச்சியை உண்டாக்கினார். முன்னாள் காதலரின் குணாதிசய மாற்றங்களை அந்நியன் பட விக்ரமுடன் அவர் ஒப்பிட்டார். மேலும் 2 ஆண்டு கால காத தன்னை முழுமையாக சிதைத்து விட்டது. சுயநலமிக்க அந்த வன்முறையை நான் புரிந்துக்கொள்ளவே நீண்ட காலம் ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
தனது சினிமா வாழ்க்கை மற்றும் முடிவுகளில் முன்னாள் காதலர் தலையிட்டதால் இந்த உறவு முடிவுக்கு வந்தது. டிராகன் பட விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்க விடாமல் செய்தார். தனது உடை, தோற்றம், மாதவிடாய் போன்ற இயற்கை நிகழ்வுகளைக் கூட அவர் தவறாகச் சித்தரித்ததால், ஒரு பெண்ணாக இருப்பதற்கே நான் வெட்கப்பட்டேன் எனவும் அனுபமா கூறினார்.
