தனது அழகாலும், குரலாலும், நடிப்பாலும் பல ரசிகர்களை ஈர்த்துள்ள அதிதி ராவ் ஹைதரி தமிழில் `காற்று வெளியிடை’, `செக்கச் சிவந்த வானம்’, `சைக்கோ’ முதலான திரைப்படங்களில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார். அதிதி ராவ் தற்போது அவரது கனவு வேடம் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.


அதிதி ராவ் தற்போது தெலுங்கு மொழியில் `மகா சமுத்ரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் ஷர்வானந்த், சித்தார்த் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரொமோஷன்களின் போது, சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார் அதிதி ராவ். `மகா சமுத்ரம்’ படத்தின் வெற்றி குறித்து தன்னம்பிக்கையுடன் காத்திருக்கும் அதிதி ராவ், `புகழ்பெற்ற பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்’ என்று கூறியுள்ளார். அவரது அடுத்த திரைப்படங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக அதிதி ராவ் தெரிவித்துள்ளார். 



தன்னைப் பற்றி அதிதி ராவ் பேசும் போது, `நான் எனது குரு மணிரத்னத்திடம் சினிமா பற்றி கற்றுக் கொண்டேன். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், திரைப்பட செட்களுக்குக் குழந்தையைப் போல செல்வது எனது வழக்கம். நான் என்னை மிகப்பெரிய நட்சத்திரமாக கருதுவதில்லை. என்னை ஒரு மாணவியாகவும், நடிகையாகவும் மட்டுமே கருதுகிறேன். ஒவ்வொரு முறையும் திரையில் புதிதாக எதையாவது நிகழ்த்த வேண்டும் என நினைக்கிறேன். திரையில் நம் கதாபாத்திரத்தைப் பார்த்தவுடன், பார்வையாளர்களுக்கு நம்மைப் பிடிக்க வேண்டும். இப்படியான மேஜிக்கை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன்’ எனக் கூறினார்.  



மேலும் இந்த உரையாடலின் போது, `மகா சமுத்ரம்’ படப்பிடிப்பின் போது மிகவும் உற்சாகமாகப் பணியாற்றியதாக அதிதி ராவ் கூறியுள்ளார். ஷர்வானந்த், சித்தார்த் ஆகியோருடன் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, இருவரையும் மிகுதியாகப் போற்றினார் அதிதி ராவ். `சித்தார்த் மிகச் சிறந்த அறிவாளி. ஒவ்வொரு துறையிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பார். அனைத்தையும் கச்சிதமாகச் செய்து முடிக்க விரும்பும் நடிகர் அவர்’ என்று தன்னுடன் நடித்த நடிகர் சித்தார்த் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார் அதிதி ராவ். 


`மகா சமுத்ரம்’ படம் வரும் அக்டோபர் 14 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு, தமிழில் மதன் கார்க்கி எழுதிய திரைக்கதையான `ஹே சினாமிகா’ படத்தில் நடிக்கவுள்ளார் அதிதி ராவ். இந்தப் படத்தை நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்குகிறார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் ஆகியோரும் நடித்துள்ளனர்.