சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடை அணிந்து வீடியோ பதிவிடுபவர்களை எச்சரிக்கும் விதமாக நடிகை ஷகீலா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். 


தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கிளாமர் நடிகையாக அறியப்பட்டவர் ஷகீலா. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் தன் மீதான அந்த பெயரை அவர் மாற்றிக்கொள்ளும் அளவுக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு காமெடி காட்சிகளில் நடித்து வந்த ஷகீலா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்றார். மேலும் தற்போது தனியார் யூட்யூப் சேனலில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசும் நேர்காணலை ஷகீலா தொகுத்து வழங்கி வருகிறார். 


இப்படியான நிலையில், நேர்காணல் ஒன்றிய பேசிய அவர், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதாவது, “என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. நான் மலையாளத்தில் கவர்ச்சி படம் பண்ணிக்கொண்டிருந்த நேரம் என்னுடைய தம்பி நண்பர்களுடன் வெளியே போகிறேன் என்று பாண்டிச்சேரி சென்றிருந்தான். சென்ற இடத்தில் சிடி வாங்கிக்கொண்டு வந்து ஆபாச படம் பார்க்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். படம் பார்க்க தொடங்கினால் அதில் நான் வந்துள்ளேன். என் தம்பி அதை பார்த்தவுடன் அழுதுக்கொண்டே பைக்கில் திரும்பி வந்துவிட்டான்.


3 நாட்களாக அவனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. என்னடா ஆச்சுன்னு நான் கேட்டேன். நீ இந்த மாதிரி படம் பண்ணிருக்கன்னு அவன் சொல்ல, நான் இந்த மாதிரி படம் தான் பண்றேன்னு நான் திரும்ப சொன்னேன். இதுதான் எனக்கு தெரிஞ்ச வழின்னும் தம்பியிடம்  கூறினேன். நான் கிளாமராக தான் நடிக்கிறேன் என புரிய வைத்தேன். இதை விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் கூட ஒரு காட்சி வைத்திருப்பார்கள். அப்படி ஒரு காட்சி என் வாழ்க்கையில் நடந்தது உண்மை தான்.  என்னுடைய தம்பியின் உணர்வுகளை அன்று தான் புரிந்து கொண்டேன். 


அதனால் தான் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடை அணிந்து வீடியோ பதிவிடுபவர்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு திருமணமாகி நாளை குழந்தைகள் வந்து உங்களுடைய இந்த வீடியோக்களை  பார்த்து என்னவென்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?. எல்லாம் பண்ணிட்டு வந்து ஷகீலா பேசலாமா என நினைக்கலாம். நான் என்னுடைய குடும்பத்தின் சூழலுக்காக பண்ணினேன். ஆனால் அதன்பிறகு அந்த பெயரை மாற்றி எல்லாரும் என்னை அம்மான்னு அழைக்க நான் படாதபாடுபட்டு விட்டேன். தயவு செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து பெரிதாக சம்பாதிக்க எல்லாம் முடியாது. ஒரு அம்மாவின் அறிவுரையாக இதை எடுத்துக்கொள்ளுங்கள் என அந்த நேர்காணலில் ஷகீலா கூறியுள்ளார்.